இறைவன் கொடுத்த அறிவுக்கு ஃபீஸ் எதுக்கு? ரூ.8 லட்சத்தை பள்ளிவாசல் ஜமாத்தாரிடம் கொடுத்த பொறியாளர்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்கு டிசைன் செய்து கொடுத்த பொறியாளர் பால் பாண்டியன், தனக்கு கொடுக்கப்பட்ட 8 லட்ச ரூபாய் ஃபீஸை மீண்டும் பள்ளிவாசலுக்கே திருப்பிக் கொடுத்திருக்கிறார்.
இறைவன் கொடுத்த அறிவுக்கு இறைவனிடமே கட்டணம் வாங்க மனமில்லாததால் ரூ.8 லட்சத்தை திருப்பிக் கொடுத்ததாக கூறியிருக்கிறார் பொறியாளர் பால் பாண்டியன்.
பொறியாளர் பால் பாண்டியனை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் முக்கியப் பிரமுகராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் புதிய ஜும் ஆ பள்ளிவாசல் நேற்று திறகப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க வளைகுடா நாடுகள் ஸ்டைலில் ஆர்கிடெக்ட் டிசைன் செய்யப்பட்டு வெளிநாட்டு பாணியில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிவாசலை கட்டுவதற்கான போட்டியில் 20க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் கலந்துகொண்ட நிலையில், ராமநாதபுரம் ரத்னா பில்டர்ஸ் செய்து கொடுத்த டிசைன் தான் வழுதூர் ஜமாத் நிர்வாகத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் பிடித்து போயிருக்கிறது.

5 ஆண்டு காலம்
இதையடுத்து சுமார் 5 ஆண்டுகாலம் நடைபெற்ற பள்ளிவாசல் கட்டுமானப் பணி ஒரு வழியாக நிறைவடைந்து நேற்று திறப்புவிழாவும் கண்டுள்ளது. ஓமனில் இருந்து இந்த டிசைனை வாங்கிய பொறியாளர் பால் பாண்டியன், பள்ளிவாசலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஆர்கிடெக்ட் டிசைன் பொருட்கள் அனைத்தையும் துபாயிலிருந்து வாங்கியிருக்கிறார்.

ரூ.8 லட்சம் ஃபீஸ்
இதனிடையே கட்டுமானப் பணிகளுக்கான தொகை போக டிசைன் செய்து கொடுத்தது, மேற்பார்வையிட்டு ஆலோசனைகள் கூறியது என இதற்காக மட்டும் கடந்த 5ஆண்டுகளில் பொறியாளர் பால் பாண்டியனுக்கு ரூ.8 லட்சம் ஃபீஸ் தரப்பட்டிருக்கிறது. அதனை மீண்டும் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகத்திடமே திருப்பிக் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் பால் பாண்டியன். இறைவன் கொடுத்த அறிவுக்கு இறைவனிடமே கட்டணம் வாங்குவது நியாயமில்லை என்பதால் பணத்தை திருப்பிக் கொடுத்ததாக பேசியிருக்கிறார்.

பாராட்டும் நன்றியும்
பால்பாண்டியன் குறித்து அறிந்த மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, பள்ளிவாசல் திறப்பு விழாவில் அவரை நேரில் சந்தித்து பாராட்டும் நன்றியும் தெரிவித்திருக்கிறார். இதனிடையே பொறியாளர் பால் பாண்டியனை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் முக்கியப் பிரமுகராக இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications