உரத்தை போதைப்பொருள் என்ற பாஜக.. நம்பிய எடப்பாடி! கொக்கைன் கடத்தினாரா திமுக கவுன்சிலர்? வெளியான உண்மை
ராமநாதபுரம்: திமுகவை சேர்ந்த கவுன்சிலர் சர்பராஸ் நவாஸ் ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கொக்கைன் கடத்திய வெளியான செய்தியை தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது உண்மை வெளியாகி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வார்டு திமுக கவுன்சிலர் சர்பராஸ் நவாஸ் மற்றும் கீழக்கரை திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய்னுதீன் என்பவரும் இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் கடத்தியதாக செய்திகள் வெளியாகின.
ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரவிய இந்த செய்தியை பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

அண்ணாமலை
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "திறனற்ற திமுக ஆட்சியில் பொதுமக்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிக்க காரணம் அதன் புழக்கத்திற்கு திமுகவினரே உதவுவதால் தான். மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு.

கீழக்கரை கடத்தல்
அடுத்த முறை போதைப் பொருட்களின் ஒழிப்பைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்த முயற்சி செய்தபோது சிக்கிய தன் கட்சிக்காரரைக் குறிப்பிடுவார் என்று நம்புவோம்." என்று பதிவிட்டு இருந்தார்.

பாஜக எஸ்ஜி சூர்யா
பாஜகவை சேர்ந்த எஸ்ஜி சூர்யா ட்விட்டரில், "திமுகவினர் வெளிப்படையான அரசாங்கத்தை நடத்துவதாக கூறிக்கொள்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு காவல்துறையே திமுகவை சேர்ந்த கவுன்சிலரை கொக்கைன் கடத்தியதற்காக கைது செய்து உள்ளது. அது இந்திய கடலோர காவல்படையா அல்லது தமிழ்நாடு போலீசா என்று தெரிய வேண்டும். போலி செய்திகள்தான் திமுக வாழ்வதற்கான ஆக்சிஜன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

அமர்பிரசாத் ரெட்டி
இந்த பதிவை பாஜகவை சேர்ந்த மாநில விளையாட்டுப்பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டியும் பகிர்ந்து இருந்தார். இதேபோல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளாருமான எடப்பாடி இதனை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் விரிவான அறிக்கை ஒன்றையே வெளியிட்டு இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
அதில், "ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை அருகே கடந்த 27.11.2022 அன்று சர்வதேச மதிப்பில் ரூ.360 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த கோகைன் என்ற போதைப் பொருள் நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பதை கடற்படை போலீசார் தடுத்து, இதில் சம்பந்தப்பட்ட கீழக்கரை நகராட்சி 19வது வார்டு திமுக கவுன்சிலர், சர்ப்ராஸ் என்பவரும்,கீழக்கரை நகராட்சி திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல்
ஒரேநாளில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்படுகிறது என்றால், புழக்கத்தில் இருக்கும் போதைப் பொருட்களின் மதிப்பு, ஒரு மாதத்திற்கு,பல ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டுமோ என்ற சந்தேகம் எழுகிறது. மாநிலத்தின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலை மாவட்ட, மாநில நிர்வாகிகள் துணையில்லாமல் சாதாரண திமுக கவுன்சிலர்கள் மட்டும் எப்படி மேற்கொள்ள முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

சிபிஐ விசாரணை வேண்டும்
இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க திமுக அரசு தவறினால், மத்திய அரசே தலையிட்டு விசாரணையை தன்வசம் எடுத்துக்கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழக மக்கள் நலன் வேண்டி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கடலோர பாதுகாப்பு குழுமம்
இந்த நிலையில் இதுகுறித்து ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல் கண்காணிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "கடந்த 28.11.2022 இரவு 08.00 மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த TN-57 AA 0077 என்ற பதிவு எண் கொண்ட பஜிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அவ்வாகனத்தில் கீழக்கரை சங்குளிகாரத்தெருவை சேர்ந்த (1) சர்பராஸ் நவாஸ் (42/2022) த/பெ. சம்சுதீன் மற்றும் (2) ஜெய்னுதீன் (45/2022) த/பெ. சம்சுதீன் ஆகியோர் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்களில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற பவுடர் (394 கிலோ) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போதைப் பொருள் இல்லை
மேற்படி நபர்கள் சந்தேகத்திற்கிடமான பொருளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் இருந்ததால் அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும மண்டபம் கடற்காவல் நிலைய உதவி ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதை பொருளோ அல்லது வெடிமருந்தோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

கடத்தியது உரம்
மேற்படி நபர்கள் விவசாய உரத்தினை மிக அதிக பணமதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்பவிருந்தது தெரிய வந்தது. இருப்பினும் இந்தச்செயல் சுங்கத்துறை சட்ட மீறலின்கீழ் வருவதால் மேற்படி இரு நபர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் சட்டப்படி உரிய மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications