அயோத்தி டூ ராமேஸ்வரம்.. இளம் பெண் துறவி மீது பரமக்குடி போலீசார் வழக்கு.. பொய் புகாரால் ட்விஸ்ட்
ராமநாதபுரம்: உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் பாதையாத்திரையாக வந்தபோது தன்னை சிலர் தாக்கியதாக பெண் துறவி புகார் அளித்திருந்தார். விசாரணையில் பெண் துறவி அளித்தது பொய் புகார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெண் துறவி மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து 38 வயதாகும் ஷிப்ரா பதக் என்ற பெண் துறவி ராமேஸ்வரத்திற்கு அண்மையில் வந்துள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருடன் கடந்த மார்ச் 8ம் தேதி இரவு மகா சிவராத்திரிக்காக வந்த பெண் துறவி ஷிப்ரா பதக், பரமக்குடியில் உள்ள சிவன் கோவில்களில் தரிசனம் செய்துள்ளார்.

பின்னர் இரவில் பரமக்குடியில் தங்கிவிட்டு, சனிக்கிழமை காலை 6 மணியளவில் அங்கிருந்து சத்திரக்குடி வழியாக ராமேசுவரம் நோக்கி பெண் துறவி ஷிப்ரா பதக் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அவருக்கு பின்னால் அவருடைய தந்தை மற்றும் சகோதரர் காரில் வந்து கொண்டிருந்தார்களாம். அப்போது அந்த வழியாக மற்றொரு காரில் வந்த 6 பேர், திடீரென அவர்களை வழிமறித்து வாக்குவாதம் செய்தார்களாம்.
மேலும் அந்த நபர்கள் ராமர் குறித்து சர்ச்சையாக பேசியும், 'கோ பேக் ராமர்’ என்றும் கோஷமிட்டார்களாம். பெண் துறவியின் கார் கண்ணாடியை உடைத்ததுடன், காரில் கட்டப்பட்டிருந்த ராமர் கொடியை சேதப்படுத்தியதாகவும் அந்த பெண் துறவி குற்றம்சாட்டினார். மேலும் இந்த சம்பவத்தில் பெண் துறவி ஷிப்ரா பதக் தனது கையில் கண்ணாடி சிதறல்கள் பட்டு லேசான காயம் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலே குறிப்பிட்ட விஷயங்களை குறிப்பிட்டு ஷிப்ரா பதக், பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அன்றே புகார் செய்தார். அதன்பேரில் பரமக்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் மற்றும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெண் துறவி ஷிப்ரா பதக், அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை ஆன்மிக பயணம் மேற்கொண்டதாகவும், காடுகள், நதிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார். ராமேஸ்வரத்தில் தனது யாத்திரையை நிறைவு செய்ய வந்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பரவி சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியி இருந்து வந்த பெண் துறவி ஷிப்ரா பதக் அளித்த புகார் பொய்யானது என்பதை கண்டுபிடித்தனர்.இதையடுத்து பெண் துறவி மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications