ராமநாதபுரத்தில் நிர்மலா சீதாராமன் சாலை.. நிஜமாகவே இருக்குங்க.. பாஜகவினர் உறுதி
ராமநாதபுரம்: ரயில்வே மேம்பாலம் கட்டித்தருவதாக உறுதி அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் உள்ள ஒரு சாலைக்கு நிர்மலா சீதாராமன் சாலை என பெயரிட்டுள்ளனர் அந்த ஊர் மக்கள்.
தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சாலை ஒன்றுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை ஷேர் செய்திருந்தார். மேலும் அவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லாந்தை... பெரிய தாமரைக்குடி சின்ன தாமரை கொடி ஆகிய கிராமங்களுக்கு ரயில்வே மேம்பாலம் அமைத்துக் கொடுத்தார் மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்.

பல வருடங்கள் கோரிக்கையாகவும் ஏக்கமாகவும் இருந்த மக்கள் பிரச்சனையை ஒரே நாளில் ரயில்வே அமைச்சகத்துடன் பேசி செய்து கொடுத்தார் நிதி அமைச்சர். கிராம மக்கள் தங்கள் ஊருக்குச் செல்லும் பிரதான சாலைக்கு நிதியமைச்சரின் பெயரை சூட்டி உள்ளார்கள். கிராம சபைக் கூட்டத்தில் மேடம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இது போட்டோ ஷாப் செய்யப்பட்டது என்று பலரும் கிண்டல் அடித்தனர். நிர்மலா சீதாராமன் பெயரில் சாலைக்கு பெயர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகியான வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில், நிர்மலா சீதாராமன் ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்போவதாக இதற்கு முன் வாக்குறுதி அளித்தார்.
அந்த வாக்குறுதி போல தானா இந்த வாக்குறுதியும்? இன்னும் அமைக்கப்படாத மேம்பாலத்துக்கு எதற்காக இந்த விளம்பரத்தட்டி? இதென்ன நிர்மலா அவர்களின் தோப்பனார் வீட்டு பணத்திலா வாங்கி கொடுத்தது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஏமாற்றுவதற்கு ஒரு அளவில்லையா? ராமநாதபுரத்தில் விமானநிலையம் அமைக்கும் பணி என்னாச்சு என நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கடந்த ஆண்டு நாடாளுமன்றத்திலேயே கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏமாற்றிய நிதி அமைச்சருக்கு அப்பாவி மக்களையா ஏமாற்றத் தெரியாது? என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், அது இருக்கட்டும் உங்க கட்சி தலைவர் இதுவரை வேங்கைவாசல் போனார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் நிர்மலா சீதாராமன் சாலை அமைக்கப்பட்டுள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் ராமசீனிவாசன்.
தங்களுக்கு பாலம் கட்டி கொடுப்பதாக நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளதால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் கிராமத்தில் உள்ள சாலைக்கு நிர்மலா சீதாராமன் பெயரை சூட்டியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications