அதாவதுங்க ஒரு பழமொழி இருக்கே! குறைகுடம்தான் எப்போதும் தளும்பும்.. ஓபிஎஸ் மீது மாஜி அட்டாக்
ராமநாதபுரம்: எப்போதும் குறைகுடம் தளும்பும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அதிமுகவில் 98 சதவீதம் பேரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் தரப்போ பொதுக் குழு உறுப்பினர்கள் வேண்டுமானால் எடப்பாடி பக்கம் இருக்கலாம். ஆனால் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக சொல்கிறார்கள்.
ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அதிமுக மூத்த நிர்வாகிகள் திரும்பியதற்கு காரணமாக சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதிலும் மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பிரஸ் மீட் வைத்தார்.

ஓபிஎஸ்
அதில் அவர் கூறுகையில் ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். சிறு வயதில் கருணாநிதி எழுதிய பராசக்தி வசனத்தை தனது தந்தை ஒப்பிக்க சொன்னதால் அதை தூங்கும்போது தலைமாட்டில் வைத்தபடியே தூங்கிக் கொண்டிருந்தேன் என ஓபிஎஸ் சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

தேனி எம்பி
அது போல் ஓபிஎஸ்ஸின் மகனும் தேனி எம்பியுமான ஓபி ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதாக பிரஸ் மீட்டில் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அவரை ஓபிஆர் தனது தொகுதி பிரச்சினைகளுக்காக சந்தித்ததே இல்லை. ஆனால் ஸ்டாலினை சந்தித்து பாராட்டுகிறார்.

அதிமுகவை சிதைக்கும் முயற்சி
அப்படியென்றால் இவர்கள் அதிமுகவை சிதைக்க திமுகவுக்கு கை கொடுக்கிறார்கள் என்பதுதானே அர்த்தம் என ஆர்.பி உதயகுமார் பரபரப்பு பேட்டியை அளித்திருந்தார். இந்த நிலையில் இந்த நிலையில்தான் அதிமுக பொதுக் குழு கூட்டம் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் பக்கம் தீர்ப்பு கிடைத்தது. அதாவது ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும். ஜூன் 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டம் செல்லாது என்பதுதான்.

எடப்பாடி தரப்பு
எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். இதனிடையே ஓபிஎஸ் அதிமுகவை வலுப்படுத்த அனைவரும் ஒரே அணியில் இணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதை இபிஎஸ் மறுத்துவிட்டார்.

ஆர்பி உதயகுமார்
இந்த நிலையில் ஆர்.பி. உதயகுமார் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் அதிமுகவின் மூத்த தொண்டர்கள், முன்னோடி தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லாம் சப்தம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் தளும்பும் என்பதை போல் ஓபிஎஸ் தரப்பினர் தங்களுக்கே பெரும்பாலானோரின் ஆதரவு இருப்பதாக மாயத்தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர் என விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications