ராமேஸ்வரம் மீனவர்களை கற்களை வீசி தாக்கி விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்.. நடுக்கடலில் அட்டூழியம்!
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்களால் தாக்கி விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்களும், தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. நாட்டுப் படகுகளிலும், மீன்பிடிப் படகுகளிலும் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பது, மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வது, மீனவர்களைத் தாக்குவது, துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை படுகொலை செய்வது போன்ற அராஜகங்களில் இலங்கை கடற்படையினர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தங்களை கற்களால் தாக்கி விரட்டி அடித்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கடலுக்கு சென்று மீன்கள் இல்லாமல் திரும்பியுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications