ராமநாதபுரத்தில் வலையில் சிக்கிய 112 கிலோ அதிசயம்.. மீனவர்கள் செம்ம குஷி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. வழக்கமாக எப்போதும்போல் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் மீனவர்கள் வலையில் 112 கிலோ எடை கொண்ட அரிய வகை மீன் சிக்கியுள்ளது. பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் இந்த மீன் ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கும் என்கின்றனர் மீனவர்கள்.
எழில் கொஞ்சும் ராமேஸ்வரம் கடலில் நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள், டால்பின், திமிங்கலம், கடற்பாசிகள் என ஏராளமான அரிய வைகயான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடாவில் காணப்படும் அரியவகை மீன்கள் ராமநாதபுரம் கடலில் தென்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து மீனவர்கள் மன்னார் வளைகுடா பகுதிக்கு நாட்டுப் படகில் வழக்கம்போல மீன் பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர். மீனவர்கள் மீன்களை எல்லாம் பிடித்துவிட்டு கரைக்கு நேற்று திரும்பியுள்ளனர்.
அப்போது, மீனவர்களின் வலையில் ஏராளமான பல வகையான மீன்கள் சிக்கியுள்ளன. அவற்றுடன் அரிய வகையான மஞ்சள் வால் சூரை மீனும் சிக்கியுள்ளது. சுமார் 112 கிலோ எடை கொண்ட அந்த சூரை மீன் 3 மீட்டர் நீளத்தில் இருந்துள்ளது. பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருந்த சூரை மீனை 4 மீனவர்கள் சேர்ந்து கரைக்கு தூக்கி வந்துள்ளனர்.
ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கும் இந்த மீன் மீனவர்கள் வலையில் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த மஞ்சள் வால் சூரை மீனை கேரளாவில் உள்ள வியாபாரி ஒருவர் 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிச் சென்றார். அரியவகை ராட்சத மஞ்சள்வால் சூரை மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஆழ்கடல் பகுதியில் மட்டுமே இந்த மஞ்சள் வால் சூரை மீன்கள் கிடைக்கும். இந்த வகை மீன்கள் பெரும்பாலும் அட்லாண்டிக் கடல் பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் மிக ஆழமான பகுதியில் மட்டுமே காணப்படும். இந்த மீன்கள் மீனவர்களின் வலைகளில் சிக்குவது மிகவும் அரிதாகும் என்றனர்.












Click it and Unblock the Notifications