ஆடி அமாவாசை.. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடவும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
மேலும் சிலர் போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயம் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக திகழ்கிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
கங்கையில் புனித நீராடிவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அந்த பலன் ராமேஸ்வரத்தில் புனித நீராடுவதால் கிடைக்கும். இங்குள்ள அக்னி தீர்த்தமும் கோயிலில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் நீராடிவிட்டு ராமநாத சுவாமியை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அக்னி தீர்த்தத்தில் புனித நீராடல்
இத்தகைய சிறப்புகளை பெற்ற அக்னி தீர்த்தத்தில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் கூடுவர். அது போல் இந்த தீர்த்தத்தில் குளித்துவிட்டு கடற்கரையில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதும் வழக்கம்.

கொரோனா பரவலைத் தடுக்க
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க கடந்த சில நாட்களாக கோயில்களை மூடப்பட்டு கிடந்தன. தமிழகத்தில் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தவுடன்தான் கோயில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் சில இடங்களில் கணிசமாக அதிகரித்து வருகிறது.

மூன்றாவது அலையின் தொடக்கம்
இது மூன்றாவது அலையின் தொடக்கம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதையடுத்து ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை என முக்கிய நாட்கள் வரிசையாக வந்ததால் தமிழகத்தில் மக்கள் கூடும் கோயில்களை தற்காலிகமாக மூட அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

புனித நீராட தடை
அது போல் இன்றைய தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் கூடுவதை தடுக்க கடந்த 7ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் தர்ப்பணம் செய்யவும் தடை விதித்துள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு அறை கொடுக்க தடை
மேலும் 12 ஆம் தேதி வரை எந்த சுற்றுலா பயணிகளுக்கும் அறை வழங்கக் கூடாது என விடுதி உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் தடை காரணமாக ராமேஸ்வரம் பேருந்து நிலையம், திட்டக்குடி சாலை, கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் வராமல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோயில் வாசல்
ஆனால் ஆங்காங்கே வெளியூரிலிருந்து பொதுமக்கள் கோவில் வாசலில் அருகே கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இது குறித்து உள்ளூர்வாசிகள் தெரிவிக்கும்போது கொரோனா பரவலை தடுக்க வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் தடை விதித்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்
ஆனால் உள்ளூர்வாசிகளான தங்களுக்கு ஆடி அமாவாசை அன்று புனித தீர்த்தங்களில் நீராடவும், திதி தர்ப்பணம் கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும்,ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த ஒரு அறிவிப்பும் வராததால் உள்ளூர்வாசிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாகவும் தெரிவித்தனர். இதே போல் ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் தர்ப்பணம் கொடுக்கும் இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications