வேலையில் குறுக்கீடு.. 'பணி செய்ய முடியவில்லை' உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதிய இன்ஸ்பெக்டர்!
ராமநாதபுரம்: தன்னுடைய வேலையில் டிஎஸ்பி அலுவலக எழுத்தர் தலையீடு செய்வதாகவும், எனவே தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் கூறி, ராமநாதபுரம் மாவட்டத்தின் இன்ஸ்பெக்டர் ஒருவர், தமிழக உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் சரவணன் தன்னுடைய காவலர் பணியை தொடர இயலவில்லை எனக் கூறி தமிழக உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

திருவாடானை டிஎஸ்பி முகாம் அலுவலக எழுத்தர் தன்னிடம் கேட்காமல் காவலர்களுக்கு பணி உத்தரவு பிறப்பித்து, தன்னிச்சையாக செயல்பட்டு தனது பணியில் தலையீடு செய்வதால் பணியை ராஜினமா செய்வதாக காவல் ஆய்வாளர் 'சரவணன்' உள்துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம் ஆர்.எஸ்.மங்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் சரவணன். கடந்த 2008 ஆம் ஆண்டு நேரடியாக சப் இன்ஸ்பெக்டராக, தேர்வான இவர், 2020 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற நிலையில், கடந்த 16 ஆண்டுகளாக பணியில் உள்ளார்.
தற்போது ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் இவர், தமது அதிகாரத்தில் திருவாடானை டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வருபவர் தலையிடுவதாக உள்துறைச் செயலருக்கு பரபரப்பாக ஒரு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில், திருவாடானை டிஎஸ்பி அலுவலக எழுத்தர், என்னிடம் கேட்காமல் R.S.மங்கலம் காவல் நிலைய காவலர்களுக்கு தன்னிச்சையாக தொடர்ந்து அலுவல்களை நியமித்து தனது அதிகாரத்தில் தலையிட்டு வருகிறார். இது தொடர்பாக ஏற்கனவே அறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறேன். தற்போது காவல் நிலைய சரகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதி நிலை நாட்ட எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், எனது வாகன டிரைவரை வேறு பணிக்கு வருமாறு ஆயுதப்படையில் இருந்து நேரடியாக தகவல் வந்துள்ளது.
மேலும், இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடப்பதால் எனது காவல் பணியை, தொடர்ந்து செய்ய முடியவில்லை. இப்போது, உத்தரகோசமங்கையில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கு, ஆர்.எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் இருந்து சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 14 காவலர்களை என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் பாதுகாப்பு பணிக்கு நியமித்துள்ளனர்.
தனது அதிகாரத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அதிகாரிகள் 10 பேர் எனது அனுமதி பெறாமல் அயல் பணிக்கு செல்கின்றனர். பொறுப்பு அதிகாரியான என்னைக் கேட்காமல் நிர்வாகத்தில் தலையிட்டு சீர்குலைவை ஏற்படுத்துவதால் இன்ஸ்பெக்டராக பணியாற்ற விருப்பமில்லை. சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் தொடர்ந்து பணியாற்றவும் விருப்பம் இல்லை என்றும் உள்துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் இன்ஸ்பெக்டர் சரவணன் குறிப்பிட்டுள்ளார். அவரது கடிதம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications