வயநாட்டில் எதிரொலிக்கும் கதறல் ஒலி.. பல உயிர்களை காவு கொண்ட நிலச்சரிவு! கேரளா விரைந்த என்டிஆர்எஃப்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் கொத்துக்கொத்தாக உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் தமிழகத்தின் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் கேரளா விரைந்துள்ளனர்.
ஏற்கனவே புயல் மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலப்புரம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவில் இருந்தே வயநாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வயநாட்டில் உள்ள சூழல்மாலா என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மீது மண், பாறைகள், மரங்கள் ஆகியவை விழுந்தன. இதில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் படுகாயங்களுடன் 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கும் நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்புப் பணியில், கேரளா தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் , உள்ளூர் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் இடிபாடிகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர்கள், முதுலுதவி மருந்துகள் தயாராக வைக்கப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து அங்கு மழை பெய்து ஒரு நிலையில் மீட்டு பணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கனமழை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாது என்பதால் அங்கு ராணுவம் விரைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சாலை மார்க்கமாக ராணுவத்தினரை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து தற்போது அங்கு தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் விரைந்து இருக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தின் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் கேரளா விரைந்துள்ளனர்.
அவர்களுடன் உயிர்காக்கும் மருந்துகள், மீட்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர். வயநாடு பகுதியில் ஏராளமான தமிழ் மக்கள் வசிக்கும் நிலையில் தமிழர்களும் அங்கு சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச் சரிவு பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சுரேஷ்கோபி ஆகியோரை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்துள்ளார்.
மேலும் பாஜகவினரும் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் வயநாடு நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications