உதயநிதியை வரவேற்ற அதிமுக? இராமநாதபுரத்தில் ‘அன்று’ நடந்தது என்ன? கட்சியினர் என்ன சொல்றாங்க தெரியுமா?
இராமநாதபுரம் : அதிமுகவில் ஒற்றை தலைமை மோதலால் பிளவுபட்டுள்ளதால் அடிமட்ட தொண்டர்கள் வேதனை அடைந்துள்ள நிலையில், தற்போது திமுகவில் பல்வேறு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் குறித்த தகவல் 'தலைவர்' ஸ்டாலினுக்கு சென்றுள்ள நிலையில் பல அதிரடி முடிவுகளை எடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உதயநிதி வருகை பல விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
ராமநாதபுரத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் இடையேயான மோதல் காரணமாக கடந்த சில நாட்களாகவே மோதல் நிலவுகிறது.
கடந்த சில மாதங்களாக திரைமறைவில் இருந்த உட்கட்சி மோதல் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பின் உதயநிதி ஸ்டாலின் பரமக்குடி வந்த போது வெட்டவெளிச்சமாக தெரிந்ததாக ராமநாதபுரம் மாவட்ட உடன் பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
உதயநிதி ஸ்டாலின்
பரமக்குடியில் கடந்த 11ம் தேதி நடந்த இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உதயநிதி ஸ்டாலின் பரமக்குடிக்கு வந்துள்ளார். அப்போது திமுக கொடிகள் உதயநிதியை வரவேற்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதி முழுவதும் அதிமுக கொடிகள் தான் அதிகளவு இருந்துள்ளது. மேலும் திமுக மாவட்ட பொறுப்பாளரான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மீதான அதிருப்தியில் இருந்த அவர்கள் சரிவர கட்சி பணி ஆற்றவில்லை என கூறப்படுகிறது
அதிமுக கொடி
உதயநிதி ஸ்டாலின் பரமக்குடி வருகின்ற போது தனது கீழ்மட்ட நிர்வாகியான சன் சம்பத்திடம் கட்சி கொடிகள் கட்டக்கூடிய பணியை ஒப்படைத்ததாகவும் அந்தப் பணியை சரிவர செய்யாத நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆன பரமக்குடியை சேர்ந்தவர் தனது தொகுதியில் தனது செல்வாக்கை காண்பிப்பதற்காக அந்த பகுதி முழுவதுமே அதிமுக கொடியை நாட்டி கெத்து காட்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர் உடன்பிறப்புகள். இதனால் பரமக்குடி செல்லும் வழியில் திமுக கொடி இல்லாமல் அதிமுக கொடிகள் அணிவகுத்து நிற்க இதனை பார்த்த உதயநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
திமுகவில் மோதல்
மேலும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி கூட செலுத்த முடியாத நிலைதான் இருந்திருக்கிறது.
உதயநிதி காரில் திமுகவினர் தொங்கி கொண்டு சென்றுள்ளனர். மேலும் நினைவிடத்தில் முட்டி மோதி களேபரமாக ஏற்பட்டுள்ளது. நினைவிடத்திற்கு செல்லும் போது கூட்டத்திற்கு இடையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன் ஆகியோரும் கூட்டத்தில் சிக்கி தவித்தனர்.
’தலைவர்’ உத்தரவு
மேலும் உதயநிதி ஸ்டாலினின் பரமகுடி வருகை ஒட்டி கட்சி வேலை பார்க்க முன்வந்த கட்சியினரும் கூட 'சில காரணங்களால்' பின்வாங்கிய நிலையில், இந்த விவகாரம் தான் தற்போது இராமநாதபுரம் திமுகவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதுகுறித்து தகவல் கட்சித் தலைமைக்கு சென்றிருக்கும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கையாக சமர்பிக்குமாறு மூத்த அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் 'சில' மாற்றங்கள் இருக்கும் என்கின்றனர் இராமநாதபுரம் உடன் பிறப்புகள்.