சவுதி எடுத்த திடீர் முடிவு.. இந்தியா உள்பட 14 நாடுகளுக்கான விசா நிறுத்தி வைப்பு.. என்ன காரணம்?
ரியாத்: இந்தியா உள்பட 14 நாடுகளுக்கான Block Work Visa-வை நிறுத்தி சவுதி அரேபியா உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் மாதம் வரை இந்த விசாவுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதால் லிஸ்ட்டில் இருக்கும் 14 நாடுகளை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு பணிக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த விசா என்பது என்ன? சவுதி அரேபியா ஏன் இந்தியா உள்பட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ரத்து செய்துள்ளது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
சவுதி அரேபியா.. நம் நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு சென்று பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த நிறைய பேர் சவுதியில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது சவுதி அரேபியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் வரை இந்தியா உள்பட 14 நாடுகளுக்கான பிளாக் வொர்க் விசா வழங்கும் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சவுதியை பொறுத்தவரை வெளிநாட்டினரை பணிக்கு சேர்க்க வேண்டும் என்றால் அங்குள்ள நிறுவனங்கள் ‛பிளாக் வொர்க் விசா' அனுமதியை பெற்றிருக்க வேண்டும். இந்த அனுமதி இருந்தால் மட்டுமே ஒரு நிறுவனம் வெளிநாட்டில் இருந்து பணிக்கு ஆட்களை சேர்க்கும்போது அவர்களுக்கு ‛என்ட்ரி விசா' என்பது வழங்கப்படும்.
தற்போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, இந்தோனேஷியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன், மொராக்கோ உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்வதற்கான ‛பிளாக் வொர்க் விசா' ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தமுடிவை சவுதியின் மனிதவள மேம்பாடு மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சகம் எடுத்து அறிவித்துள்ளது. இந்த விசா ரத்து நடைமுறை ஜூன் மாதம் இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. சவுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணத்துக்கு அதிகமான இஸ்லாமியர்கள் செல்வார்கள். கடந்த ஆண்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலி நடந்தது. இதற்கு ஹஜ் விசாவை தவிர்த்து பிற விசாக்களை பயன்படுத்தி சவுதிக்கு சென்றவர்கள் புனித யாத்திரை மேற்கொண்டது தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள 14 நாடுகளுக்கு ‛பிளாக் வொர்க் விசா' நடைமுறையை ஜூன் மாதம் இறுதி வரை நிறுத்தி வைத்துள்ளது சவுதி.
ஜூன் மாதம் இறுதியில் ஹஜ் யாத்திரை என்பது முடிவுக்கு வரும். அதன்பிறகு மீண்டும் இந்த விசா என்பது இந்த பட்டியலில் உள்ள 14 நாடுகளுக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் தற்போதைய உத்தரவால் சவுதிக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் வேலை நிமித்தமாக சவுதிக்கு செல்லும் தொழிலதிபர்களை அதிகமாக பாதிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications