கொரோனாவை கட்டுப்படுத்தாத.. இந்தியா உட்பட இந்த 15 நாடுகளுக்கு சென்றால் அபராதம்.. சவுதி அரேபியா அதிரடி
ரியாத்: கொரோனா உச்சத்தில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு முறைகேடாக யாராவது சென்று வந்தால், அவர்களுக்கு மூன்று ஆண்டு பயண தடை மற்றும் அபராதம் விதிக்க சவுதி அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு உலகின் எந்த நாட்டிலும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. சிங்கப்பூர், மலேசியா போன்ற சில நாடுகள் மட்டும் பலகட்ட நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் குறைத்துள்ளன.
அதேநேரம் சர்வதேச விமானப் போக்குவரத்து மூலம் எங்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பல நாடுகள் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

போக்குவரத்தில் தளர்வுகள்
அப்படி வைரஸ் பாதிப்பு சிறப்பாகக் கட்டுக்குள் உள்ள நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. கொரோனாவை கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு கடந்த மே மாதம் சர்வதேச விமான போக்குவரத்தில் சில தளர்வுகளை அறிவித்தது. அதாவது தடை செய்யப்பட்ட 15 நாடுகளைத் தவிர மற்ற நாடுகளுக்கு எவ்வித முன்னனுமதியும் பெறாமல் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

முறைகேடாகப் பயணம்
கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு சவுதி அரேபியாவில் இதுபோன்ற தளர்வுகள் அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில், சவுதி நாட்டை சேர்ந்த சிலர் தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு முறைகேடாகச் சென்று வந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அப்படிச் சென்று வந்தவர்களுக்கு மூன்று ஆண்டு பயண தடை மற்றும் அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அதிரடி முடிவு
இது குறித்து சவுதி அதிகாரி ஒருவர் கூறுகையில், "தடை செய்யப்பட்ட நாடுகளுக்குச் சென்றது உறுதியானால் அவர்கள் யாராக இருந்தாலும் சரி நாடு திரும்பியவுடன் அவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மூன்று ஆண்டுகள் சர்வதேச பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்படும். கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்தாத. தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு நேரடியாகவே அல்லது மற்ற நாட்டிற்குச் சென்று அங்கிருந்தோ செல்வதற்கு இன்னும் தடை தொடர்கிறது என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது" என்றார்.

தடை செய்யப்பட்ட நாடுகள்
இந்தியா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, லெபனான், துருக்கி, வியட்நாம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சவுதி தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 3 கோடி மக்கள் தொகையைக் கொண்ட மிகப் பெரிய வளைகுடா நாடாகக் கருதப்படும் சவுதியில் இதுவரை 5.2 லட்சம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 8,189 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications