இது முருகனா? சேலத்தில் முகம் மாறிய 56 அடி முருகன் சிலை.. விளாசிய பக்தர்கள் கடும் சர்ச்சை - மூடல்
சேலம்: சேலத்தில் புதிதாக 56 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. முகம் மாறிய முருகனால் அந்த சிலையால் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அந்த சிலை உடனடியாக மூடப்பட்டு புனரமைக்கும் பணி தொடங்க உள்ளது.
அழகென்ற சொல்லுக்கு முருகா.. அழகென்றால் முருகனே.. என தமிழ் கடவுளாக வணங்கப்படும் முருகனின் பெருமை சொல்லும் பாடல்கள் ஏராளம். கையில் ஈட்டி வைத்திருந்தாலும் நெற்றி நிறைய திருநீர் பட்டையுடன் குழந்தை முதல் பாலகனாக சாந்த முகத்துடன் குன்றுகள் தோறும் அமைந்திருக்கும் கோவில்களில் வீற்றிருப்பவர் முருகன்.

மலை மட்டுமின்றி தரையில் அமைந்திருக்கும் கோவில்களிலும் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தமிழ்நாட்டில் முழுமுதற் கடவுளாக முருகனை பொதுமக்கள் வழிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தைப்பூச திருநாள் உள்பட முருகனுக்கு உகந்த நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அருபடை வீடுகளிலும் கூட்டம் அலைமோதும்.
தமிழகம் மட்டுமின்றி தென்இந்திய மாநிலங்களிலும் முருகன் வழிபாட்டு தலங்கள் உள்ளன. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முருகன் மீது நம்பிக்கை கொண்ட பக்தர்கள் ஏராளம். இதற்கு சாட்சி தான் மலேசியா. மலேசியாவில் பத்துமலை முருகன் கோவில் பக்தர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளது. தங்க நிறத்தில் தகதக மேனியுடன் 140 அடி உயரத்தில் பிரமாண்டமாக அங்கு முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சேலம் வாழப்பாடியை அடுத்த புத்திர கவுண்டம் பாளையம் பகுதியிலும் 146 அடி உயரம் கொண்ட பிரமாண்ட முருகன் சிலை உள்ளது. இங்கு பக்தர்கள் தினமும் வழிபாடு நடத்தி வருகின்றனர். அதேபோல் சேலம் மாவட்டம் ராஜமுருகன் கோவிலில் பிரமாண்டமான முருகன் சிலை அமைக்க கோவில் நிறுவன தலைவர் வெங்கடாசலம் முடிவு செய்தார். இதற்கான பணிகள் தொடங்கியது.
சிற்பியும் முருகன் சிலையை வடிவமைக்க தொடங்கினர். தற்போது முருகன் சிலை வடிவமைக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது. அப்போது தான் கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது முருகனின் முகம் என்பது முற்றிலும் மாறுபட்டு இருந்தது. வழக்கமாக கோவில்களில் இருக்கும் முருகனை போல் இந்த முருகன் சிலை இல்லை.
இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகின. இதனை பார்த்த பலரும் கோவில் நிர்வாகம் மற்றும் சிலை வடிவமைத்த நிர்வாகியை விமர்சனம் செய்ய தொடங்கினர். இதையடுத்து தற்போது இந்த சிலை துணி போட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் முருகன் சிலையை புனரமைக்க வேண்டும் என பக்தர்களும், நெட்டிசன்களும் கோரிக்கை வைத்து வருகின்றன. இதனை ஏற்ற கோவில் நிர்வாகம் சிலைக்கு மறுவடிவமைப்பு கொடுக்கும் பணியை தொடங்க உள்ளது.
இதற்கிடையே தான் முருகன் சிலையின் முகம் எப்படி மாறியது? என்பது பற்றி விசாரித்தபோது, ‛‛அந்த சிலையை வடிவமைத்த சிற்பிக்கு முருகன் சிலை செய்த அனுபவம் இல்லை எனவும், அவர் முனீஸ்வரன் சிலையை தான் வடிவமைத்தாகவும், அந்த அனுபவத்திலேயே முருகன் சிலையை வடிவமைத்ததால் முகம் முனீஸ்வரன் போல் மாறிவிட்டது. தற்போது ரூ.40 லட்சம் வரை செலவழிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சிலை புனரமைப்பு செய்யப்படும்'' என கோவில் நிர்வாகத்தினர் சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications