ஏற்காடு இடைத்தேர்தல் பாதுகாப்பு: மருதாயி உட்பட 7 ரெளடிகள் அதிரடி கைது
சேலம்: டிசம்பர் மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஒரு பெண் உட்பட 7 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வருகிற டிசம்பர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, பணம், மது விநியோகத்தைத் தடுக்க தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் உள்ள ரெளடிகளைக் கைது செய்ய போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்திரவின்படி, வாழப்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் மாதையன் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் மாதேஸ்வரன், வெங்கடாசலம், மற்றும் போலீஸார் பெத்தநாயக்கன்பாளையம் 12- வது வார்டு தாண்டானூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், அப்பு (எ) சேகர், பரசுராமன், பரமசிவம்,வெங்கடாசலம், தங்கராஜ் மற்றும் மருதாயி வயது-48, ஆகிய ஏழுபேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஆத்தூர் கோட்டாட்சியர் டி.ஜெயராம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், அவர்களிடம் ‘இனி குற்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றனர் போலீசார்.
சம்பந்தப்பட்ட ரௌடிகள் அடுத்த ஓராண்டுக்கு எந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டாலும் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications