ஆன்லைன் வகுப்பிற்கு டேப் வாங்க சேர்த்த பணம்.. மொத்தமாக முதல்வர் கொரோனா நிதிக்கு அளித்த சேலம் சிறுவன்
சேலம்: ஆன்லைன் வகுப்பிற்கு டேப் வாங்க, கடந்த ஓர் ஆண்டாகச் சேமித்து வைத்திருந்த மொத்த உண்டியல் பணத்தையும் 9 வயது சிறுவன், முதல்வர் கொரோனா நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.
Recommended Video
இந்தியாவில் இப்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களைப் போலவும் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மாநில அரசின் வருவாய் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள மாநிலத்திலுள்ள அனைத்து மக்களும் தங்களால் முடிந்த நிதியை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பலரும் தங்களால் முடிந்த தொகையை முதல்வரின் கொரோனா நிதிக்கு அளித்து வருகின்றனர். குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் உள்ள சிறுவர், சிறுமிகள் தங்கள் சேமிப்புகளை முதல்வரின் கொரோனா நிதிக்கு அளித்து வருகின்றனர்.
அதேபோல மற்றொரு சம்பவம் தான் சேலத்தில் நடந்துள்ளது. சேலம் சின்னத்திருப்பதி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் - சரண்யா தம்பதியின் 9 வயது மகன் மௌலித் சரன். இவர் ஆன்லைன் வகுப்பிற்கு டேப் ( TAB) வாங்க, கடந்த ஓர் ஆண்டாக உண்டியலில் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் உண்டியலில் சேமித்து வைத்திருந்த மொத்த பணமான 2 ஆயிரத்து 60 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காகச் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் வழங்கினார்.
இது குறித்து சிறுவன் மௌலித் சரன் கூறுகையில், கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் நிதி கேட்டுள்ளார். என்னால் முடிந்த பணத்தைக் கொடுத்துள்ளேன். இதே போல் அனைவரும் தங்களால் முடிந்த பணத்தைத் தமிழக அரசுக்கு வழங்க முன்வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications