முடியும் பொதுத்தேர்வுகள்.. மாயமாகும் மாணவிகள்.. சேலத்தில் 2 நாட்களில் 4 பேர் ‛மிஸ்ஸிங்’.. என்ன நடக்குது?
சேலம்: தமிழ்நாட்டில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தான் சேலத்தில் 2 நாட்களில் 4 மாணவிகள் திடீரென மாயமாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்களுக்கும் அட்வைஸ் வழங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வரும் 20ம் தேதி வரை 10ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளது.

மாறாக பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் முடிந்தன. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது. அதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு என்பது மார்ச் 14ல் துவங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடந்தது.
இந்நிலையில் தான் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி குறித்து ஆலோசிக்க தொடங்கி உள்ளதோடு பிற விடுமுறை கால படிப்புகளை பயில தொடங்கி உள்ளனர். அதேபோல் பிளஸ் 1 மாணவர்களும் தங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் சேலத்தில் தற்போது நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கடந்த 2 நாட்களில் மட்டும் சேலத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 முடித்த 4 மாணவிகள் திடீரென்று மாயமாகி உள்ளனர். இதுதொடர்பாக சேலம் மாநகர காவல் நிலையங்களில் மாணவிகளின் பெற்றோர்கள் புகார்கள் அளித்துள்ளனர். இந்த புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 4 மாணவிகளையும் தீவிரமாக தேட தொடங்கி உள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‛‛தற்போது பிளஸ் 2 மாணவிகள் 3 பேர், பிளஸ் 1 மாணவி ஒருவர் என 4 பேர் மாயமாகி உள்ளனர். பொதுதேர்தவை எழுதும் மாணவ-மாணவிகள் மாயமாவது ஆண்டுதோறும் நடக்கிறது. தற்போது மாணவிகள் மாயமானதன் பின்னணி என்ன? என்பது பற்றி விசாரித்து அவர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்'' என்றனர்.
இந்நிலையில் தான் தற்போது போலீசார் அட்வைஸ் வழங்கி உள்ளனர். அதாவது ‛‛மாணவிகளிடம் பெற்றோர் நண்பர்களாக பழக வேண்டும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி நட்பாக பேசி அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கு எழும் அச்ச உணர்வை போக்க வேண்டும். நாங்களும் பள்ளி பருவ காதலால் ஏற்படும் சிக்கல் மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு நடத்துகிறோம். தற்போதைய புகார்களின் அடிப்படையில் 4 மாணவிகளையும் தீவிரமாக தேடி வருகிறோம்" என்றனர்.
இதுபோன்ற சம்பவம் தமிழ்நாட்டில் மட்டும் நடப்பது இல்லை. இந்தியாவில் பல்வேறு இடங்களில் பொதுத்தேர்வு எழுதிய பிறகு மாணவ-மாணவிகள் மாயமாகும் சம்பவங்கள் நடந்து வருகிறது. தேர்வு சரியாக எழுதாமல் இருப்பது, காதல் விவகாரம் உள்ளிட்டவை மாயமாவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இருப்பினும் சேலத்தில் தற்போது மாயமான மாணவிகளின் பின்னணியில் என்ன காரணம் உள்ளது? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications