ஆசை ஆசையாக குரூப் 4 தேர்வு எழுதி சர்வேயர் ஆன சேலம் ஜீவிதா.. யோசிக்கவே முடியாத ட்விஸ்ட்
சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஜீவிதா என்பவர் கடந்த 2023ம் ஆண்டு சர்வேயர் ஆக பணியில் சேர்ந்தார். இவர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வருகிறார். இவரது உதவியாளராக கண்ணதாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்து தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் கையும் களவுமாக சிக்கி உள்ளனர். சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர்களை கைது செய்தனர்.
பத்திரப்பதிவு, பட்டா பெயர் மாற்றம், நிலத்தை அளப்பது, வீட்டு வரி ரசிது, மின் இணைப்பு பெறுவது, மின் இணப்பு பெயர் மாற்றம் செய்வது, பட்டா வாங்குவது, வாரிசு சான்றிதழ் வாங்க, ஜாமீன் சான்றிதழ் வாங்குவதற்கு என பல்வேறு அரசு துறைகளில் சில அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது, ஆங்காங்கே நடக்கிறது.

அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். ஆடியோ ஆதாரம் இருந்தாலே கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். கையும் களவுமாக சிக்கினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார். நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க வேண்டிய நிலை லஞ்சம் வாங்கியவர்களுக்கு வரும். அப்படி ஒரு நிலை சேலம் அரசு ஊழியருக்கு வந்துள்ளது.
குரூப் 4 தேர்வில் வெற்றி
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 28 வயதாகும் ஜீவிதா என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு குரூப்-4 தேர்வு எழுதியுள்ளார். அதில் வென்ற ஜீவிதா நில அளவையர் (சர்வேயர்) பணியில் சேர்ந்தார். தற்போது இவர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக வேலை செய்து வருகிறார். இவருக்கு உதவியாளராக 48 வயதாகும் கண்ணதாசன் என்பவர் உள்ளார்.
வீட்டு மனை பெயர் மாற்றம்
இந்த நிலையில் ஆத்தூர் தாலுகா துலுக்கனூர் கிராமத்தை சேர்ந்த 52 வயதாகும் விவசாயி குமரேசன் என்பவர் தான் வீட்டுமனை வாங்கி இருப்பதாகவும், அந்த மனைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து தருமாறு நில அளவையர் ஜீவிதாவை அணுகி உள்ளதாக கூறப்படுகிறது அதற்கு ஜீவிதா தனது உதவியாளரை சந்திக்குமாறு கூறினாராம். அவரது உதவியாளர் கண்ணதாசன் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் வீட்டுமனை பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்படும் என்று கூறினாராம்.
10 ஆயிரம் லஞ்சம்
இதற்காக முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உதவியாளர் தெரிவித்தாராம். அப்படியா என்று கேட்டுவிட்டு, பணம் ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பி சென்ற குமரேசன், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நரேந்திரன் மற்றும் போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை விவசாயி குமரேசனிடம் கொடுத்து சர்வேயரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தார்கள்.
கையும் களவுமாக கைது
இதையடுத்து ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று சென்ற குமரேசன், லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தை நில அளவையர் ஜீவிதா, கண்ணதாசன் ஆகியோரிடம் கொடுத்தாராம். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நில அளவையர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்தூரில் பெண் நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications