“என்ன அண்ணாமலை பாக்குற.. உன் மூஞ்சிய பாத்தா அப்படி தெரியலயே”.. நிர்வாகிகளை கடிந்துகொண்ட அன்புமணி
சேலம்: சேலத்தில் இன்று நடைபெற்ற பாமக கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளை கடிந்து கொண்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். நிர்வாகிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அன்புமணி ராமதாஸ் பேசியதால் கட்சியினர் ஆடிப்போய் அமர்ந்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, "இதே மாவட்டத்தில் தனியாக நின்று 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது கூட்டணியில் இருந்தும் 2 தொகுதிகளைத்தான் வென்றுள்ளோம். அப்படி என்றால் நாம் வளர்ந்திருக்கிறோமா? நமக்கு பலம் இருக்கிறது, இளைஞர் சக்தி இருக்கிறது, வழிகாட்ட அய்யா ராமதாஸ் இருக்கிறார். ஆனால் அன்றைக்கு இருந்த உழைப்பு நம்மிடம் இல்லை.

அன்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி, களத்தில் இறங்கி வேலை செய்தோம். இன்று கிராமங்களுக்குப் போவதே கிடையாது. தமிழ்நாட்டில் யாரைக் கேட்டாலும் பாமக சிறந்த கட்சி என்று சொல்வார்கள். நல்ல கொள்கை, கோட்பாடு, தொலைநோக்குப் பார்வை உள்ள கட்சி என்று சொல்வார்கள். ஆனால், இந்த செய்திகளை களத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது இல்லை. கட்சியின் ஒன்றிய செயலாளர்களே களத்திற்கு செல்வது இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளவு பெரிய வருத்தம்? சேலம் லோக்சபா தொகுதியில் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 4 தொகுதிகளில் நாம் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறோம். ஆனால், நமக்கு கிடைத்தது சொற்ப வாக்குகள். சரி, திமுக 500 ரூபாய், அதிமுக 500 ரூபாய் கொடுத்தார்கள். ஆனால் நம் வாக்கு, நம் உழைப்பு எங்கே போனது?
நாம் இழந்த வாக்குகளை எல்லாம் மீண்டும் வர வைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. நம்மைப் போல யாராலும் உழைக்க முடியாது, ஆனால் ஏதோ ஒரு தொய்வு இருக்கிறது. நம் கட்சியின் மிகப்பெரிய சொத்து, என் தம்பிகளும், தங்கைகளும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி பணியாற்றக் கூடியவர்கள்.
மனதுக்குள் இருக்கும் வெறியை இன்னும் 10 மாதங்களில் பார்க்க வேண்டும். தனியாகப் போட்டியிட்டால் கூட சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பாமகவுக்கு அதிக எம்.எல்.ஏக்களை கொடுத்துள்ள மாவட்டம் சேலம் மாவட்டம்.
எவ்வளவோ செய்திகளை மக்களிடம் சொல்லலாம்.. என்ன அண்ணாமலை அப்படியே பாக்குற.. உன்னையும் தான் சேர்த்துச் சொல்றேன்.. உன் தொகுதியில் வாங்குனியே ஓட்டு.. 52 ஆயிரம் வாக்குகள் வாங்கிய தொகுதி அது. இன்னும் 10 மாதங்கள் தான் இருக்கின்றன.
வெறி வரவேண்டும். 10 மாதங்கள் தான் இருக்கின்றன. பல்லைக் கடித்துக் கொண்டு களத்தில் இறங்குங்க.. வெறி வருமா? என்ன.. உன் மூஞ்சிய பார்த்தா வெறி வர்ற மாதிரி தெரியலயே.. இரண்டில் ஒன்றை பார்த்து விடலாம்.. என்ன ராமகிருஷ்ணா.. கோபம் வந்துடுச்சா?" என நிர்வாகிகள் பெயரைக் குறிப்ப்பிட்டுப் பேசியுள்ளார் அன்புமணி.












Click it and Unblock the Notifications