தமிழகத்தை ஆட்சி செய்வது மோடிதான்.. எடப்பாடி பழனிசாமி இல்லை.. ஜவாஹிருல்லா பேச்சு
சேலம்: தமிழ்நாட்டை ஆட்சி செய்வது எடப்பாடி பழனிசாமி இல்லை, செய்வது மோடி தான் என்று தெரிவித்த மமக ஜவாஹிருல்லா, அதிமுக மாநில உரிமைகளைப் பறிகொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

சேலத்தில் திமுகவின் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இதில் பேசவுள்ளனர்
இந்த மாநாட்டில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, "தமிழ்நாட்டை ஆட்சி செய்வது எடப்பாடி பழனிசாமி இல்லை, மோடி தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறார். மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக அதிமுக பறிகொடுத்துவிட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக்கொள்கிறார். ஆனால், வேளான் சட்டத்தால் தமிழகம் பாதிப்பில்லை என்று பச்சையாக பொய் சொல்கிறார்.
மருத்துவத்தைத் தொடர்ந்து நர்சிங், கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வை வித்திட்டார்கள். 5ஆம் வகுப்பு தொடங்கி, 12ஆம் வகுப்பு வரை பல பொதுத்தேர்வுகளை வைக்க திட்டமிட்டுள்ளார்கள். சாதாரண கிராமப்புற மாணவர்களைப் படிக்கவிடக் கூடாது என்பதற்கான திட்டம் தான் இது.
தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்கள் நாட்டில் உயர் பதவிகளை எட்டியுள்ளனர். அப்துல் காலம், இஸ்ரோ சிவன் உள்ளிட்டோர் அப்படி வந்தவர்கள் தான். ஆனால் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இனி தமிழ்நாட்டிலுள்ள எந்த மாணவருக்கும் கிடைக்காது.
இப்படியொரு மோசமான நிலையை உருவாக்கும் புதிய கல்விக்கொள்கையை அதிமுக அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டது. பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் மிக மோசமாகவே உள்ளது. ஜனநாயகம் என்பது வீட்டு தீபம், சர்வாதிகாரம் என்பது காட்டுத்தீ என்று கருணாநிதி கூறுவார். அந்த காட்டுத்தீ தமிழ்நாட்டில் நுழைந்துவிடாமல் தடுப்பது அனைத்து தமிழர்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும்" என்று அவர் பேசினார்












Click it and Unblock the Notifications