பாஜக பிரமுகரை சோடா பாட்டிலால் தாக்கிய அதிமுகவினர்... வாழப்பாடியில் பரபரப்பு
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாஜக பிரமுகர் வரதனை அதிமுகவினர் சோடா பாட்டிலால் அடித்து மண்டையை உடைத்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளரை எதிர்த்து பாஜக பிரமுகர் வரதன் தனது மனைவியை சுயேச்சையாக போட்டியிட வைத்ததால் இந்த மோதல் நடைபெற்றது.
அதிமுகவும், பாஜகவும் ஒரே கூட்டணியில் உள்ள நிலையில் அந்தக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மோதிக்கொண்டது இரண்டுக் கட்சி தலைமைக்கும் கவலையை அளித்துள்ளது.

கவுரவப் பிரச்சனை
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் பல இடங்களில் ஒரே கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்ட நிகழ்வுகள் நடைபெற்றன. ஊருக்குள் யார் பெரிய மனிதர் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் பலரும் இதை கவுரவப்பிரச்சனையாக கருதினர்.

சுயேச்சை போட்டி
இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் அந்தனூர்பட்டி ஊராட்சியில் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், பாஜக பிரமுகர் வரதன் தனது மனைவி ராஜலட்சுமியை சுயேச்சையாக போட்டியிட வைத்துள்ளார். இது தொடர்பாக அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் வரதன் அதனை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அடிதடி
நேற்று இரண்டாம் கட்டத்தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக பிரமுகர் வரதன் வாக்களிக்கும் இடம் அருகே நின்று வாக்களிக்க வந்தவர்களிடம் தனது மனைவிக்கு ஓட்டு போடுமாறு கூறியுள்ளார். இதனைப் பார்த்த அதிமுக தரப்பினர் வரதனிடம் இது குறித்து கேட்டிருக்கின்றனர். அப்போது வாக்குவாதம் முற்றி அடிதடி ஏற்பட்டது.

மண்டை உடைப்பு
இதனிடையே சோடாபாட்டிலால் பாஜக பிரமுகர் வரதனை அதிமுகவினர் தாக்கியதில், அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனை அழைத்துசெல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications