மயங்கி விழுந்த பாட்டிக்கு உதவிய இளையராணி... நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்
இளைய ராணியின் மனித நேயத்தை பார்த்து நெகிழ்ந்து போன முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை சேலம் விமான நிலையத்திற்கு வர வழைத்து பாராட்டியுள்ளார்.
சேலம்: மயங்கி விழுந்த மூதாட்டிக்கு யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து பாராட்டி பரிசளித்துள்ளார் மு.க ஸ்டாலின்.
Recommended Video
சேலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவரை அவரது மகன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, சாலையிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
கொரோனா அச்சத்தில் யாரும் அந்த மூதாட்டிக்கு முதலுதவி அளிக்க முன்வரவில்லை. அப்போது அந்த வழியாக சென்ற இளம்பெண் இளையராணி மூதாட்டியை இருசக்கர வாகனத்தின் நடுவில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போதும் அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். யாருமே உதவ முன்வராத நேரத்தில் இளையராணி அந்த மூதாட்டிக்கு உதவிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றது. இளைய ராணியின் மனித நேயத்தை பார்த்து நெகிழ்ந்து போன முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை சேலம் விமான நிலையத்திற்கு வர வழைத்து பாராட்டி புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர், பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு கொரோனா அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன். இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து மனமார பாராட்டினேன். இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது என்று தனது பதிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.