வெளிநாடுகளிலிருந்து வாங்க வாங்கன்னு கூப்பிடுறாங்க! திமுக ஆட்சியை பற்றி உலகத்திற்கே தெரியுது-ஸ்டாலின்
சேலம்: புதிய ஒப்பந்தங்களை போட வருமாறு வெளிநாடுகளிலிருந்து தமிழக அரசை வாங்க.. வாங்க.. என அழைப்பு விடுப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;
மக்களுக்கு நல்லது செய்யவே எனக்கு நேரம் பத்தவில்லை! பதில் சொல்லி நேரத்தைவீணடிக்கமாட்டேன் -ஸ்டாலின்
ரொம்ப யோசித்தேன்
''தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது எனக்கு ஒருவிதமான தயக்கம் இருந்தது. அந்த தயக்கத்துக்கு என்ன காரணம் என்றால் - பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பாதாளத்துக்குப் சென்றுவிட்டது; இதை உடனடியாக - ஓராண்டு காலத்தில் சீர்செய்ய முடியுமா என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன்.''
நிதிநிலை கவலைக்கிடம்
''தமிழ்நாட்டின் நிதிநிலைமை என்பது மிகமிகக் கவலைக்கிடமாக இருந்தது. ஆறு லட்சம் கோடி ரூபாய்க் கடனில் தமிழ்நாடு தத்தளித்துக்கொண்டு இருந்தது. இந்த நிதி நெருக்கடியில் இருந்து உடனடியாக மீள முடியுமா என்று நான் யோசித்தேன்.
இவைதான் என் மனதில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்த தயக்கங்கள். ஆனால், இன்று தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்திருக்கிறோம் - என்பதை நான் தலைநிமிர்ந்து சொல்கிறேன்.''
மிகப் பெரும் நம்பிக்கை
''இந்த ஓராண்டு காலம் என்பது மிகப்பெரிய நம்பிக்கையை எனக்குக் கொடுத்திருக்கிறது. தமிழகத்தைத் தலைசிறந்தத் தமிழ்நாடாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உருவாகியிருக்கிறது. இந்தியாவில் சிறந்த மாநிலமாக மட்டுமல்ல - அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக விரைவில் ஆக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்திருக்கிறது.''
வாங்க வாங்க
''தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மலர்ந்துவிட்டது என்று உலகத்துக்கே தெரிந்துவிட்டது. அதனால்தான் நம்மை அங்கிருந்து வரவழைக்கிறார்கள். வாங்க...
வாங்க... புதிய ஒப்பந்தங்களைப் போடுங்க... என்று வெளிநாட்டில் இருந்து நம்மை அழைக்கும் நிலைமை வந்திருக்கிறது. இப்படி உலகம் உணர்ந்ததை - எல்லோரும் உணர்ந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சிலரால் உணரமுடியவில்லை. அவர்களுக்காக நான் வேதனைப்படுகிறேன்,
பரிதாபப்படுகிறேன், வெட்கப்படுகிறேன்.''