கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்
சேலம்: ரிசர்வ் வங்கி விதிமுறையால், கடன் தள்ளுபடி அறிவித்தால் அரசு 45-60 நாட்களுக்குள் வங்கிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, அந்த அளவுக்கு மட்டுமே தள்ளுபடி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் முழுக் கடன் தள்ளுபடிக்கு பதிலாக படிப்படியாக (slab-wise) தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என தவெக விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்படும் என்று விஜய் தலைமையிலான தவெக கட்சி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. அதன்படியே மே 25ம் தேதியான நேற்று கூட்டுறவு கடன் தள்ளுபடியை விஜய் தலைமையிலான தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

தமிழக அரசின் உத்தரவின்படி, கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. சிறு விவசாயிகளுக்கு 50% வரை கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தத் கடன் தள்ளுபடி திட்டம் 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை (10 மாதம் மட்டும்) கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
இதனிடையே தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக கூட்டுறவு கடன் தள்ளுபடி தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். அதில், "பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், ஸ்கேம் செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா சிஎம் சார்?" இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள தவெக மகளிர் நிர்வாகிகள், "ரிசர்வ் வங்கி விதிமுறையால், கடன் தள்ளுபடி அறிவித்தால் அரசு 45-60 நாட்களுக்குள் வங்கிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, அந்த அளவுக்கு மட்டுமே தள்ளுபடி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் முழுக் கடன் தள்ளுபடிக்கு பதிலாக படிப்படியாக (slab-wise) தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்று வெறும் 16 நாட்களே ஆன அரசு இதை செய்துள்ளது! அப்படி இருக்க பவள விழா பாப்பா பதறி போக தானே செய்யும்?" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications