தமிழ்நாடு முழுவதும் போகிறவர் இங்க வரமாட்டாரா? அண்ணாமலை கோரிக்கையை நிராகரித்து கோர்ட் அதிரடி ஆணை!
சேலம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வரும் மார்ச் 2-ம் தேதி அவர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான பியூஸ் மனுஷ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க கூடாது என கிறிஸ்தவ மிஷனரிகளின் உதவியோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என யூடியூப் சேனல் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் 4வது குற்றவியல் நீதிமன்ற நடுவர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை மனு தாக்கல் செய்தார்.
தான் யூடியூப் சேனலில் கொடுத்த பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றும், தான் கூறிய கருத்துக்கள் சமூகத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் அதனால் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்தது. அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், சேலம் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை தொடரலாம் என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு அண்ணாமலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று சேலம் 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருக்க வேண்டிய நிலையில் அவர் இன்று ஆஜராகவில்லை. அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் நாச்சிமுத்து ராஜா ஆஜராகினார்.
அப்போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என நீதித்துறை நடுவரிடம் அண்ணாமலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். ஆனால், அதனை ஏற்காத நீதித்துறை நடுவர், “தமிழ்நாடு முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் செய்து வருகிறார். அவரை நீதிமன்றத்துக்கு வரச் சொல்லுங்கள்” என்று கூறினார்.
மேலும், வழக்கு விசாரணையை வரும் மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்றைய நாளில் அண்ணாமலை சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார். அண்ணாமலையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அவர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications