தெருவில் வெடித்த பட்டாசு.. தெறித்து மேலே விழுந்ததால் தகராறு.. பரிதாபமாக பலியான ஒரு உயிர்!
பட்டாசு வெடித்ததில் தகராறு ஏற்பட்டு இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்
Recommended Video
சேலம்: தெருவில் வெடித்த ஒரு பட்டாசு இளைஞர் மீது தெறித்து விழுந்தது.. இந்த விவகாரம் கடைசியில் ஒரு உயிரை பலி வாங்கும் அளவுக்கு சென்றுவிட்டது.
சேலம் அம்மாபேட்டை நதிமுல்லா மக்கான் தெருவை சேர்ந்தவர் அபுபக்கர். 23 வயதாகிறது. டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று, இவரது நண்பர் முகமது சபீர். இவர், 2 நண்பர்களுடன் ஒரே பைக்கில் சைக்கிளில் அம்மாபேட்டை வித்யா நகர் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த தெருவில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பட்டாசு முகமது சபீரின் சட்டை மீது தெறித்து விழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தவர்களை பார்த்து சத்தம் போட்டார். இதனால் அங்கிருந்த இளைஞர்களுக்கும், முகமது சபீருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து முகமது சபீர், அபுக்கருக்கு போனை போட்டு விஷயத்தை சொன்னார். உடனே அபுபக்கர் 10 பேரை கூட்டிக் கொண்டு சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார். அதேபோல் எதிர் தரப்பினரும் 10-க்கும் மேற்பட்டோரை வரவழைத்து விட்டனர். இரு தரப்பும் பலமாக தெருவிலேயே மோதிக் கொண்டனர்.
கையில் கிடைத்த கற்கள், கட்டைகள், இரும்பு கம்பிகளால் ஒருத்தரையொருத்தர் அடித்து கொண்டனர். அந்த தெருவே ரணகளமாகிவிட்டது. அதனால் மக்கள் எல்லோரும் தலைதெறிக்க ஓடினார்கள். இந்த தாக்குதலில் அபுபக்கரும், முகமது சபீரும் பலத்த காயமடைந்தனர். இதில் அபுபக்கர் அங்கேயே உயிரிழந்தார்.

முகமது சபீர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி, இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அதில் 3 பேரை பிடித்துவிசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications