கேஸ் அடுப்பை பற்ற வைத்த போது திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்.. 5 பேர் பலி.. சேலத்தில் பரபரப்பு
சேலம்: சேலம் அருகே கருங்கல்பட்டியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 வீடுகள் தரைமட்டமான நிலையில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சேலம் கருங்கல்பட்டி செளவுண்டம்மன் கோவில் தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன அதே பகுதியை சேர்ந்த வெங்கட் ராஜன் கட்டிடத்தில் கணேசன் கோபி முருகன் ஆகிய மூன்று குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோபி வீட்டில் ராஜலட்சுமி இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர் அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது இதனால் அருகில் இருந்த நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின.

இடிபாடுகள்
பயங்கர சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

காயத்துடன் மீட்பு
இதில் இந்திராணி, மோகன்ராஜ், ராகசுதா, கோபால் , தனலட்சுமி, சுதர்சன், கணேசன், உஷாராணி, லோகேஷ், கோபி உள்ளிட்டோரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4 மணி நேரம் போராட்டம்
வீடு இடிந்ததில் மேலும் பலர் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினரும் காவல் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ராஜலட்சுமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு முருகன் மகள் பூஜாஸ்ரீ(10) காயத்துடன் மீட்கப்பட்டார்.

பத்மநாபன்
மேலும் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வரும் பத்மநாபன் (49) மற்றும் குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பத்மநாபனும் சடலமாகவே மீட்கப்பட்டார். அது போல் எல்லம்மாள், கார்த்திக்ராம் (18), பத்மநாபனின் மனைவி தேவி (36) ஆகியோரை தேடும் பணிகள் நடைபெற்றதில் அவர்கள் மூவரும் சடலமாகவே மீட்கப்பட்டார்கள். இதனால் சிலிண்டர் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோகம்
சிலிண்டர் வெடித்து நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகி ஒருவர் உயிரிழந்து 14-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே மழையால் தங்கள் உறவினர்களின் உயிரையும் உடைமைகளையும் இழந்த மக்கள் இது போன்ற விபத்துகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக வைப்பது குறித்து வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications