அன்புமணிக்கும்... ராமதாசுக்கும்... கொடுக்கும் அளவுக்கு திமுகவிடம் பணம் இல்லை -தயாநிதி மாறன்
சேலம்: பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கொடுக்கும் அளவுக்கு திமுகவிடம் பணம் இல்லை என தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர் இதனைக் கூறினார்.
அதிமுக கூட்டணியில் நீடிக்க பாமக ஆயிரம் கோடி ரூபாய் கேட்பதாக சொல்லப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம்
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திமுக எம்.பி.தயாநிதி மாறன் சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பாமக திமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், பாமக யாருடன் பேரம் பேசுகிறது என்ற தகவல் தனக்கு தெரியாது என்றார்.
கொள்கை
மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியின் போதே அதிமுகவிடம் 400 கோடி ரூபாய் பாமக பெற்றதாக கூறப்படுவதாகவும் இந்த முறை ஆயிரம் கோடி ரூபாய் பாமக தரப்பில் கேட்கப்படுவதாக சொல்லிக்கொள்வதாகவும் கூறினார், ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கொடுக்கும் அளவுக்கு திமுகவிடம் பணம் இல்லை என்றும் தங்களிடம் கொள்கை தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.
என்ன செய்தீர்?
முன்னதாக பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய தயாநிதி, சாகும் போது சங்கரா சங்கரா என்று கூறுவதை போன்று அதிமுக ஆட்சி முடிய இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இட ஒதுக்கீடு போராட்டத்தை பாமக முன்னெடுத்திருப்பதாக விமர்சித்தார். ஏன் இத்தனைக் காலம் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தவேண்டும் என தோன்றவில்லையா என வினவினார்.
தயாநிதி பேச்சு
தேர்தலுக்காக இப்போது இட ஒதுக்கீட்டை ராமதாஸ் கையில் எடுத்திருப்பதாக சாடினார். ராமதாசும், அன்புமணி ராமதாசும் வன்னியர் சமுதாய மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற வேண்டாம் என தாம் கேட்டுக்கொள்வதாகவும் தயாநிதி மாறன் கூறினார்.