துறையே இல்லாத ஒரே அமைச்சர்.. திமுக என்ற தீர்த்தம் பட்டதும் புனிதமாகி விட்டார்.. எடப்பாடி விளாசல்!
சேலம்: செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு கொடுத்தவரே ஸ்டாலின் தான், திமுக என்ற தீர்த்தம் செந்தில் பாலாஜி மீது தெளித்ததும் புனிதர் ஆகிவிட்டாரா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். சாணார்பட்டி என்ற இடத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்திற்கும் முடிவு விழா நடத்திவிட்டனர் எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், மதுபான விற்பனை மூலமாக அதிக தொகையை முதல்வர் குடும்பத்திற்கு கொடுத்தது அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்யவில்லை, கொள்ளையடிப்பதில் மட்டும்தான் குறிக்கோளாக இருந்தனர். செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடுத்துள்ளனர். உண்மையான முதலமைச்சராக ஸ்டாலின் இருந்தால் ஊழல் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவை இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, கைதி எண் கொடுக்கப்பட்ட ஒருவர் அமைச்சராக எப்படி நீடிக்க முடியும்? காவல்துறை பாதுகாப்பில் தான் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். உடல்நிலை சரியானவுடன் சிறையில் அடைத்து விடுவார்கள். ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டவர் எவ்வாறு அமைச்சராக இருக்கமுடியும்? எந்த ஆட்சியாக இருந்தாலும், ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டவர் அமைச்சரவிலிருந்து நீக்கப்பட்ட வேண்டும் என்றும் பேசினார்.
துறையே இல்லாத அமைச்சர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார். அமைச்சரவையில் நீக்கப்பட்டால் செந்தில் பாலாஜி உண்மையை சொல்லிவிடுவார். அவ்வாறு சொல்லிவிட்டால் திமுக ஆட்சி போய்விடும். இதனால்தான் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களும் பதறிபோய் மருத்துவமனையில் குவிந்து நலம் விசாரித்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு கொடுத்தவரே ஸ்டாலின் தான் அப்பொழுது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார். போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி, பலபேரிடம் பணம் பெற்றுகொண்டு ஏமாற்றியதாக புகார் சொன்னவர் இப்போதைய முதல்வர் ஸ்டாலின் தான் என்றும் கூறினார். இப்போது திமுக கட்சிக்கு சென்றவுடன் செந்தில் பாலாஜி தூய்மையாகி விடுவாரா? திமுக என்ற தீர்த்தம் செந்தில் பாலாஜி மீது தெளித்ததும் புனிதர் ஆகிவிட்டாரா?" என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications