Go Back Modi.. சேலத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி- திவிக, விசிக, இடதுசாரிகள் கைது!
சேலம்: லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக சேலம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
18-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெறும்.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கோவையில் நேற்று பிரதமர் மோடி அணிவகுப்பு பேரணி நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று சேலத்தில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி கட்சித் தலைவர்களான டாக்டர் ராமதாஸ், ஜிகே வாசன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வழக்கம் போல் திமுக- காங்கிரஸை மிக கடுமையாக சாடினார். ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றை முன்வைத்து திமுக- காங்கிரஸை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணியை பிரதமர் மோடி விமர்சித்தார். அத்துடன் பாஜக அல்லாத பிற கட்சிகளின் தலைவர்களான மறைந்த பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரை சுட்டிக்காட்டியும் பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக சேலத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி திரும்பப் போக வலியுறுத்தி கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது. சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் கறுப்புக் கொடிகளுடன் திரண்ட 100க்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மோடிக்கு கறுப்பு கொடி காட்டியதாக 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக திராவிடர் விடுதலை கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று 19.03.2024 சேலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் தோழர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் டேவிட், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் தோழர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தோழர் தங்கதுரை, சேலம் மாநகர செயலாளர் தோழர் ஆனந்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications