கூட்டத்தில் திடீர் சலம்பல்.. “நீ நல்லவருதான்.. உள்ள இருக்கவரு சரில்லயே” தொண்டரை கூல் செய்த எடப்பாடி!
சேலம் : சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது, குடிபோதையில் தொண்டர் ஒருவர் சவுண்டு விட, அதற்கு "நீ நல்லவன் தான். உள்ள இருக்குறவரு சரியில்லயே" என கவுண்டர் கொடுத்தார் ஈபிஎஸ்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னமுத்தூரில் அதிமுக கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். தொடா்ந்து விழாவில் பேசிய எடப்பாடி, கடந்த 2 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை தந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை விமர்சித்து, இந்த இரண்டு ஆண்டுகளில் லஞ்சம் மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளதாக தொிவித்தார்.

எடப்பாடி சரமாரி தாக்கு : எடப்பாடி பேசுகையில், "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் விற்பனை, அதனால் ஏற்படும் வன்முறைகள், கொலைகள் போன்ற செய்திகளே டிவியில் வருகிறது. அதிமுக ஆட்சிதான் தமிழ்நாட்டின் பொற்காலமாக இருந்தது. 2 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை தந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.
ஆனால் இரண்டு ஆண்டுகளில் லஞ்சம் மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளது. அனைத்து துறையிலும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்கிற நிலை உள்ளது. இதுதான் ஸ்டாலின் சொல்லும் திராவிட மாடல் ஆட்சி." என விமர்சித்தார்.
தொடா்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் 52 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. குப்பைக்கு கூட வரி வசூல் செயகின்றனர். இனி வீதியில் நடப்பதற்கு கூட வரி விதித்து விடுவார்கள்.
போதை அட்டூழியம் : தொடர்ந்து பேசிய அவர், "30 ஆயிரம் கோடி ஊழல் பணம் வசூல் செய்த அரசு திமுக அரசு. இதை நான் சொல்லவில்லை நிதித்துறை அமைச்சராக இருந்தவரே சொல்கிறார். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக திறந்து வைக்கிறது. அதிமுக பெற்ற பிள்ளைகளுக்கு திமுக பெயர் வைக்கிறது. அதிமுக கொண்டுவந்த திட்டங்களை வேண்டுமென்றே 2 ஆண்டுகள் காலம் தாழ்த்தி தற்போது ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்.
6 ஆயிரம் பிராந்தி கடையில் 4 ஆயிரம் பிராந்தி கடைகள் 2 ஆண்டுகளாக வரி செலுத்தாமல் செயல்பட்டுள்ளன. இதன் மூலம் 20 ஆயிரம் கோடி மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிமுக கேள்வி கேட்ட பின்னர் கண்துடைப்புக்கு சிலவற்றிற்கு சீல் வைத்தனர். பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வேண்டும் என வெளிப்படையாக கேட்கிறார்கள்.
கஞ்சா போதையில் சிறுவர்கள் என்ன செய்கிறோம் என தெரியாமல் தவறு செய்கின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் காரில் வந்து செயின் பறிக்கின்றனர். குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையினரே குற்றம் செய்கின்றனர். சாப்பிட்ட உணவுக்கு காசு கொடுக்காமல் தகராறு செய்கின்றனர்." என கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
சலம்பிய தொண்டர் : எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் மதுபோதையில் எழுந்து சத்தம் போட்டு சலசலப்பை ஏற்படுத்தினார். மேடையில் இருந்த நிர்வாகிகள் அவரை அமைதியாக இருக்குமாறு சைகை செய்தனர். ஆனாலும், அவர் ஆஃப் ஆகாத நிலையில் அவரிடம் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
"கொஞ்சம் இரு ராஜா.. எனக்கு கால் வேற வலிக்குது. பேசிக்கலாம் பேசிக்கலாம்.. நீ நல்லவரு தான். உள்ள இருக்குறவரு சரியில்லயே.. ஒரு நிமிசம் பொறுப்பா" என சிரித்துக்கொண்டே அவருக்கு பதிலளித்தார்.
அதற்குள் கூட்டத்தில் இருந்த மற்ற அதிமுக நிர்வாகிகள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications