சொந்த மண்ணிலேயே.. 2 முக்கிய புள்ளிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.. அதிரடி ஆக்ஷன்!
சேலம்: எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் தனது சொந்த தொகுதியான எடப்பாடியைச் சேர்ந்த இரு முக்கிய நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிய சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அக்கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் முழுமையாக அவருக்கே வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்கு எதிராகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்படும் நிர்வாகிகளை அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், தற்போது எடப்பாடியைச் சேர்ந்த 2 நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் புறநகர் மாவட்டம் - எடப்பாடி நகரம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, திரு. M.கந்தசாமி, (எடப்பாடி நகர புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் திரு. K.உத்திரராஜ், (எடப்பாடி நகரக் கழக முன்னாள் துணைச் செயலாளர்) ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications