எடப்பாடியா பேசுறது? பிடிஆருக்கு கான்டெக்ட் சர்டிபிகேட்! அமைச்சர் பதவியை பறிக்காததற்கும் செம விளக்கம்
சேலம்: ஓபிஎஸ்- டிடிவி தினகரன் சந்திப்பு குறித்தும் அமைச்சரவை மாற்றம் குறித்தும் பல்வேறு விஷயங்களை அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சேலத்தில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் டிடிவி தினகரனும் ஓபிஎஸ்ஸும் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது மாயமானும் மண் குதிரையும் கூட்டு சேர்ந்துள்ளது போல் இருக்கிறது.

பூஜ்ஜியம் + பூஜ்ஜியம் = பூஜ்ஜியம்: துரோகியும் துரோகியும் இணைந்துள்ளனர். தினகரனின் கூடாரம் காலியாகியுள்ளது, காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று பண்ருட்டி ராமசந்திரன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அவர் எம்ஜிஆருக்கும் விசுவாசமாக இல்லை, ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாக இல்லை. தேமுதிகவுக்கு சென்றார் அங்கும் அவர் விஜயகாந்துக்கு விசுவாசமாக இல்லை.
அவர் எப்போதும் யாருக்கும் விசுவாசமாக இருந்ததே இல்லை. ஐபிஎல் விளையாட்டை பார்க்க வேண்டும் என்றால் ஓபிஎஸ் பார்த்துவிட்டு வந்திருக்கலாம். ஆனால் அங்கு ஸ்டாலின் மருமகன் சபரீசனை எதற்காக சந்தித்து பேசினார். நாங்கள் ஏற்கெனவே பன்னீர் செல்வம் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என கூறினோம். இப்போது அதை ஓபிஎஸ்ஸே நிரூபித்துவிட்டார்.

ஒரு ஆடியோ விவகாரத்தால் அரசாங்கமே ஆடிப் போய்விட்டது. பிடிஆர் நிதியமைச்சராக இருந்தவர். அவர் மெத்த படித்தவர். பொருளாதார நிபுணர். அவரே உதயநிதியும் சபரீசனும் 30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக கூறியிருந்தார். அதனால்தான் அவரது துறையை மாற்றியுள்ளனர்.
இந்த மோசடி குறித்து பிடிஆர் மேலும் எந்த ரகசியத்தையும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமல் வேறு இலாகாவை மாற்றிக் கொடுத்துள்ளனர். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்தார். இந்த நிலையில் அவரது துறையை தங்கம் தென்னரசுவுக்கு கொடுத்துவிட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டுள்ளது.
ஆடியோ விவகாரம் குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இரு முறை விளக்கம் அளித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினும் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். வேண்டுமென்றே புனையப்பட்டது என தெரிவித்திருந்தார். எனினும் இந்த ஆடியோ மேட்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அமைச்சர் பிடிஆரின் இலாகாவை மாற்ற வேண்டாம் என பிடிஆர் ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கலைஞர் இருந்தால் அவருடைய இலாகாவை மாற்றியே இருக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள். அதே போல் நாசர் ஆதரவாளர்களும் அவருடைய பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications