எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி
சேலம்: சேலம் ஆத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாளில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் திமுகவில் அவரை முதல்வராக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் என்னுடைய கட்சியிலேயே அத்தனை பேரையும் முதல்வராக நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
சேலம் ஆத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர், புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "ஸ்டாலின் திமுகவில் அவரை முதல்வராக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் என்னுடைய கட்சியிலேயே அத்தனை பேரையும் முதல்வராக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

அனைவரும் முதல்வர்
நான் முதல்வர் ஆவேன் என்று எண்ணினேனோ.. இல்லை, உங்களை போல் மேடையின் கீழ் அமர்ந்து கேட்டவன், இன்று முதல்வராகி இருக்கிறேன். அதேபோல் இங்கே இருக்கிறவர்களும் ஒரு காலத்தில் உயர்ந்த இடத்திறகு வர முடியும். அது அனைத்து இந்திய அண்ணா திராவிட முனனேற்ற கழகத்தில் மட்டும் தான் நடக்கும். வேறு எந்த கட்சியிலும் நடக்காது.

சந்திரசேகர் எம்பி
இங்கே மேடையில் உள்ள சந்திரசேகர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் மாநிலங்களவை எம்பியாகி உள்ளார். நானும் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோருடன் யாரை எம்பியாக்குவது என்று ஆலோசித்த போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை எம்பியாக்க வேண்டும் என்றோம். அந்த அடிப்படையில் அருமை சகோதரர் சந்திரசேகர் எம்பியானார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், சாதாரணவர்களும் அதிமுகவில் எம்பியாக முடியும், அமைச்சராக முடியும், ஏன் முதல்வராகவும் முடியும்.

திமுகவில் சாத்தியமில்லை
இது ஸ்டாலினின் திமுகவில் இது சாத்தியமா. ஸ்டாலினே முதல்வராக முடியாது. அதுவேறு விஷயம். அதை மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். ஸ்டாலின் தற்போது தன் மகன் உதயநிதி வருவதற்காக தயார் செய்து கொண்டிருக்கிறார். இது வாரிசு அரசியல், கருணாநிதி இருந்தார். அடுத்து ஸ்டாலின் வந்தார். இனி உதயநிதி வருவார்.

விஸ்வாசமாக இருந்தால்
இது எவ்வளவு பெரிய அக்கிரமம் பாருங்க. அந்த கட்சிக்காக பாடுபட்டு உழைத்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்க.. க்ருணாநிதி மகன் என்பதறகாக ஸ்டாலின் வந்தார். ஸ்டாலின் மகன் என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக வந்திருக்கிறார். ஸ்டாலின் 70 வயது வரை இளைஞரணியில் இருந்தார். அதன்பிறகு மகனுக்கு கொடுத்து விட்டார். அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. அதிமுகவில் எந்த பதவிக்கும் உழைத்தவர்கள் விசுவாசமாக உள்ளவர்கள் வர முடியும். சாதாரண ஆட்களை தான் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினோம்" இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.












Click it and Unblock the Notifications