காரை விட்டு இறங்குடா.. புகழேந்தியை தாக்க முயன்ற எடப்பாடி ஆதரவாளர்கள்.. ‘ஜஸ்ட் எஸ்கேப்’! பரபர வீடியோ!
சேலம் : சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற ஓபிஎஸ் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ் தரப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் பெங்களூர் புகழேந்தி மீது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக உட்கட்சி மோதல் வெடித்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் நிறைவடையப் போகிறது. தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கை முழுமையாக ஓங்கி உள்ளது. மேலும் உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான முடிவுகளை அளித்துள்ளதால் சட்ட ரீதியாகவும் பலம் பெற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதேசமயம், ஓபிஎஸ் தரப்பினர் மக்கள் மன்றத்தை நாடும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். திருச்சியில் அண்மையில் பிரமாண்ட மாநாட்டை நடத்திய நிலையில், அடுத்தடுத்து சேலம், மதுரை ஆகிய இடங்களில் மாநாடு நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் உள்ள சேலம் பிரதான சாலையில் உள்ள ஒரு தனியார் அரங்கில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் மற்றும் மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்துப் பேசினர். அப்போது திடீரென அதிமுகவினர் ஆலோசனை கூட்டத்தில் புகுந்து அங்கிருந்த அதிமுக கொடிகளை அகற்ற வேண்டும் என கூச்சலிட்டு அங்கிருந்த பேனர்கள் மற்றும் கொடிகளை அகற்ற முயற்சித்தனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பலர் கைது செய்யப்பட்ட நிலையில் நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த ஓபிஎஸ் தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்து பெங்களூர் புகழேந்தி அங்கிருந்து காரில் புறப்பட்டபோது எடப்பாடி நகர செயலாளர் முருகன் தலைமையில் அதிமுகவினர் திரண்டு, புகழேந்தியின் காரை வேகமாக தட்டி, தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்க முயன்றனர். அப்போது கார் கண்ணாடி உயர்த்தப்பட்டிருந்ததால் பெங்களூர் புகழேந்தி தப்பினார்.
புகழேந்தியின் கார் டிரைவர், காரை விரைவாக ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால் புகழேந்தி எந்தவித காயங்களுமின்றி தப்பினார். எடப்பாடி தரப்பினர், ஓபிஎஸ் ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications