புகழேந்தி யார்? வார்டு கவுன்சிலராக கூட ஜெயிக்க முடியாதவர்! நோட்டா கிட்ட தோற்றவர்! இபிஎஸ் கடும் தாக்கு
சேலம்: பெங்களூர் புகழேந்தி யார், அவருக்கு அதிமுக அலுவலக விவகாரம் குறித்து பேச என்ன உரிமை இருக்கிறது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழு நடந்த நாளன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறை நடந்தது. இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இந்த நிலையில் அதிமுக அலுவலக சாவி கேட்டு ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.
திறந்த வீட்டில்.. இங்க ஒண்ணும் இல்ல.. இங்கிலாந்து போறீங்களாய்யா?- கடுமையா வார்த்தையை விட்ட புகழேந்தி
தீர்ப்பு என்ன
அதன் தீர்ப்பு இன்று வெளியானது. அப்போது நீதிபதிகள் ஓபிஎஸ் தரப்புக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில் பிறகு எப்படி அவர் உரிமை கோருகிறார் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக வழியில் அல்லாது அரசியல் கட்சி செயல்படுவதை ஏற்க முடியுமா? ஒரு கட்சி அலுவலகத்திற்கு சீல் வைப்பது என்பது பெரிய செயல்.
வன்முறை
கட்சி அலுவலகத்தில் வன்முறை என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சினை என கூறிய நீதிபதி, ஓபிஎஸ்ஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து புகழேந்தி கூறுகையில் அதிமுக அலுவலக வழக்கில் தீர்ப்பு என்பது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு இல்லை. ஓபிஎஸ்ஸை அதிமுக அலுவலகத்திற்கு செல்லக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லையே என தெரிவித்திருந்தார்.
புகழேந்தி யார்
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று சேலத்தில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவர் கூறுகையில் அதிமுக அலுவலகம் குறித்து பேசுவதற்கு புகழேந்தி யார், அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர். அமமுகவில் இருந்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவுக்கு களங்கம்
அதிமுகவில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார். அதனால் புகழேந்தியை அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கிவிட்டோம். அவருக்கு அதிமுக குறித்து பேச எந்த உரிமையும் இல்லை. ஒரு வார்டு கவுன்சிலர் பதவியைகூட பெற இயலாதவர்.
நோட்டாவை விட குறைவு
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அமமுக சார்பில் ஓசூரில் போட்டியிட்டு 2000 வாக்குகளையே பெற்றார். அதாவது நோட்டாவை விட குறைச்சலான வாக்குகளையே பெற்றார். எனவே அவர் எல்லாம் பெரிய ஆளே கிடையாது. ஊடகங்கள்தான் அவரிடம் பேட்டி எடுத்து பெரியாளாக்குகின்றன என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.