Edappadi: வேட்புமனு தள்ளுபடிக்குப் பின் மாயமான தவெக அருண்குமார்… கடத்தலா? பரபரப்பு புகார்!
சேலம்: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சட்டசபை தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறங்கிய தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சமயத்தில் அருண்குமார் மாயமாகியுள்ளார். இந்த விவகாரத்தில் அருண்குமார் கடத்தப்பட்டாரா அல்லது சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டாரா என காவல் துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று தவெக வழக்கறிஞர் அறிவழகன் சேலம் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஐபி தொகுதியான எடப்பாடியில் போட்டியிடவுள்ளார். அவருக்கு எதிராக எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட அருண்குமார் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

வேட்பு மனு நிராகரிப்பு
அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் மாற்று வேட்பாளராக நித்யா என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அருண்குமார், நித்யா ஆகிய இருவரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அருண்குமாரின் வேட்புமனுவை முன்மொழிந்தவர்களை முறைப்படி உறுதிப்படுத்த முடியாததால் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மனுவில் இருந்த சில தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாகவும் எடப்பாடி தொகுதியில் தவெகவினர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தவெக தற்போது 233 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாற்று வேட்பாளரும் நிராகரிப்பு
அருண்குமாரின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கொந்தளித்த தவெக தொண்டர்கள், அருண்குமார் ஆதரவாளர்கள் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முர்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அருண்குமாரை யாரோ கடத்தி விட்டனர் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவெகவினரை கலைக்க முயன்றதால் போஸீஸாருக்கும், தவெக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ள ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தவெக போட்டியிட முடியாது
மாற்று வேட்பாளரான நித்யாவின் மனுவும் நிராகரிக்கப்பட்டதால் எடப்பாடியில் தவெக போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது அக்கட்சிக்கும் பெரும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது. இதனால், எடப்பாடி தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. இந்நிலையில், அருண்குமார் மாயமான விவகாரம் தொடர்பாக சேலம் எஸ்பி.க்கு தவெக வழக்கறிஞர் அறிவழகன் புகார் அளித்துள்ளார்.
கடத்தப்பட்டாரா..
எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் மாயமான விவகாரத்தில், அருண்குமார் எங்கு இருக்கிறார் என்று தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். கடத்தப்பட்டாரா அல்லது சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டாரா என்று காவல் துறை உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications