விடாமுயற்சி.. விஸ்வரூப வெற்றி! IPS அதிகாரியான லாரி டிரைவர் மகன்!
சேலம்: பொறியியல் படித்து ஐடி துறையில் நல்ல சம்பளத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் விடாமுயற்சி செய்து ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுச் சாதித்துக் காட்டி இருக்கிறார்.
வாழ்க்கையில் சாதாரண பின்புலத்தைக் கொண்டவர்கள் வெற்றி பெறும் போது அது பலருக்கும் உற்சாகம் தருவதாக அமைந்துவிடுகிறது. அப்படித்தான் லாரி ஓட்டுநரின் மகன் ஒருவர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுச் சாதித்துக் காட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். அந்தக் காலத்திலேயே பி.காம்., படித்த இவர் அரசு வேலைக்குப் போக வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டு உழைத்திருக்கிறார். எப்படியாவது வங்கியில் வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத் தேர்வுகளை எழுதியும் பார்த்துள்ளார். ஆனால், எவ்வளவு போராடியும் அவரால் அரசு வேலை என்ற கனவை எட்டிப் பிடிக்க முடியவில்லை.

அதன்பின்னர் கலைவாணியை திருமணம் செய்து கொண்ட இவர், லாரி ஒன்றைச் சொந்தமாக வாங்கி அதைவைத்து தொழில் நடத்திவந்துள்ளார். இவரது மூத்த மகன் கார்த்திகேயனைப் போராடி பொறியியல் படிக்க வைத்துள்ளார். அதுவும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதால் கோவை அரசுக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
ஆகவே, அதில் தொழில்நுட்ப துறையைத் தேர்வு செய்து படித்து முடித்தவருக்கு ஐடி துறையில் வேலையும் கிடைத்துள்ளது. ஆனால், ஐபிஎஸ் ஆகவேண்டும் என்பதே அவரது கனவாக இருந்துள்ளது. இரண்டாவது மகன் விக்னேஷூம் பொறியியல் படித்து முடித்துவிட்டு, ஐடி துறையில் பணிக்கு அமர்ந்துள்ளார்.

கார்த்திகேயனின் மனம் ஐடி துறையோடு ஒன்றிப் போகவில்லை. அதை உணர்ந்த அவர் சைதை துரைசாமியின் ஐஏஎஸ் அகாதெமியில் இணைந்து போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கடந்த 2017இல் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். அப்போது அவருக்கு ஐபிஎஸ் பதவி கிடைக்கவில்லை. ரயில்வே துறையின் பாதுகாப்புப்படையில் டெல்லியில் வேலைக்கான உத்தரவு கிடைத்துள்ளது.
அதன்பின் சென்னைக்குப் பணி மாற்றம் பெற்று வந்த அவர் ஒன்றரை மாதம் சம்பளம் இல்லாமல் விடுப்பு எடுத்து மீண்டும் ஐபிஎஸ் தேர்வுக்கு தயாராகியுள்ளார். அரசு வேலை கிடைத்த பிறகும் கஜினி முகம்மது போல் விடாமல் அடுத்தடுத்து முயற்சி செய்து, கடந்த ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் கார்த்திகேயன்.

இது பற்றிப் பேசியுள்ள கார்த்திகேயன் தந்தை அறிவழகன், "இந்த லாரியை வைத்து தொழில் செய்துதான் என் பிள்ளைகளை இந்தளவுக்குப் படிக்க வைத்தேன். அவர்கள் என்ன மதிப்பெண் வாங்குகிறார்கள்? என்ன படிக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. படிக்க வைக்கச் செலவு செய்தேன். மூத்த மகன் இன்று லட்சியத்துடன் படித்து ஐபிஎஸ் ஆகி இருக்கிறார். அதற்கு முழுக் காரணம் என் மனைவிதான். அவர்தான் இவர்களின் படிப்பை முழுமையாகக் கவனித்துக் கொண்டார்" என்கிறார்.
இந்தத் தம்பதியின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். தங்களின் பிள்ளை இந்தளவுக்கு விடா முயற்சி எடுத்து வென்றுள்ளதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர். தனது வெற்றி பற்றி கார்த்திகேயன், "நமக்குள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் எனத் தாகம் இருந்தால் போதும். கோட்சிங் சென்டர் போய் படிக்க வேண்டிய தேவை இல்லை. சொந்தமாகவே படிக்கலாம்.
சைதை துரைசாமி போன்ற இலவசமாக கற்றுத் தரும் அகாதெமிகள் உள்ளன. அதைக்கூடப் பயன்படுத்தலாம். கிராமத்தில் இருந்து வருகிறோம், பின் தமிழ் மீடியம் படித்து இருக்கிறோம் எனக் கூச்சப்படக் கூடாது. அது ஒரு பிரச்சினைதான். அது தீர்க்க முடியாத ஒரு தடை அல்ல" என்கிறார்.












Click it and Unblock the Notifications