சூழ்ச்சி செய்து முதல்வரானவர் கருணாநிதி.. ஆனால் அவரே ஸ்டாலினை நம்பவில்லை.. முதல்வர் பழனிசாமி அட்டாக்
சேலம்: திமுகவில் அண்ணா இறப்பிற்குப் பிறகு, சூழ்ச்சி செய்து முதல்வரானவர் கருணாநிதி என்று பிரசாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கருணாநிதியே ஸ்டாலினை நம்பி திமுக தலைவர் பதவியைக் கொடுக்காதபோது, நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் வரும் செவ்வாய்க்கிழமை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
நாடகம் போடும் ஸ்டாலின்
சேலம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். அவர் போடாத வேடங்கள் இல்லை. தற்போது உள்ள உலகம் விஞ்ஞான உலகம் என்பதால் ஸ்டாலின் பொய்களை இளைஞர்கள் இனியும் நம்பமாட்டார்கள் என்றார்.
முதல்வர் கனவு பலிக்காது
அதிமுகவிற்கு இயற்கையும், மக்களும் சாதகமாக இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று என்னைப் பற்றி யாருக்கும் தெரியாது என்று பேசி, அனைவருக்கும் என்னைப் பற்றித் தெரிய வைத்ததற்கு ஸ்டாலினுக்கு நன்றி. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று கனவு காண்கிறார். ஆனால் எந்த காலத்திலும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது.
கருணாநிதி நம்பவில்லை
திமுகவில் அண்ணா இறப்பிற்குப் பிறகு, சூழ்ச்சி செய்து முதல்வரானவர் கருணாநிதி. பின்னர் உடல்நிலை குன்றிய போதிலும் ஸ்டாலினை நம்பி, திமுக தலைவர் பதவியைக் கருணாநிதி கொடுக்கவில்லை. கருணாநிதியே ஸ்டாலினை நம்பவில்லை. அப்படி இருக்கும்போது நாட்டு மக்கள் எப்படி உங்களை நம்புவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
வெளிச்சத்திற்கு அழைத்து வந்த ஜெயலலிதா
தொடர்ந்து திமுகவை சாடிய அவர், இந்தியாவிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக தான். எனவே காலத்தால் அழிக்க முடியாத கரும்புள்ளி திமுக மீது உள்ளது. தமிழக மக்களை இருட்டறையில் அடைத்தது போல் திமுக ஆட்சியில் வைத்திருந்தனர் ஆனால் மக்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா தான். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தியது அதிமுக என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.