சேலத்தையே குமுற வைத்த வேல் சத்ரியன்! ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ‘அசிஸ்டெண்ட்’! இப்படி ஒரு தண்டனையா?
சேலம்: சேலத்தில் பெண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட போலி இயக்குநரும், அவருக்கு துணையாக இருந்த இளம் பெண்ணும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், சமூக வலைதளங்களில் துணை நடிகை தேவை என்று வெளிவந்த விளம்பரத்தைப் பார்த்து, சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டா பகுதியில் இயங்கி வந்த சினிமா நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றார்.
அந்த அலுவலகத்தில் எடப்பாடி வீரப்பன்பாளையத்தைச் சேர்ந்த வேல்சத்திரியன் என்பவரும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜெயஜோதி என்பவரும் இருந்துள்ளனர். அவர்கள் அந்தப் பெண்ணிடம், தாங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறியுள்ளனர். இதனையடுத்து, அந்தப் பெண், அந்த சினிமா கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
கொலை மிரட்டல்
ஆனால், அந்தப் பெண், அந்த சினிமா கம்பெனியில் 3 மாதம் வேலை பார்த்தும் அதற்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஆபாச படத்திற்கு போஸ் கொடுத்தால் அதிக பணம் தருவதாகவும் அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளனர். இதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்ததால், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், கம்பெனியின் ஒரு அறையில் பெண்களின் ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதைக் கண்ட அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார்.
காவல் நிலையத்தில் புகார்
இதனையடுத்து, தான் தவறான இடத்திற்கு வந்துவிட்டதாக உணர்ந்த அந்தப் பெண், உடனடியாக சுதாரித்துக் கொண்டு, சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் சுப்புலெட்சுமி மற்றும் போலீசார் அங்குச் சென்று வேல் சத்ரியன், ஜெயஜோதி ஆகியரிடம் விசாரணை நடத்தினர்.
திடுக்கிடும் தகவல்கள்
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இருவரும் சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி, பல பெண்களை ஆபாச படம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த சினிமா அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில், 30-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள், கணினி, லேப்டாப், கேமிரா, பென் டிரைவ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
300-க்கும் மேற்பட்ட பெண்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கணினி, லேப்டாப்பில் ஆய்வு செய்தபோது, 300-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் இருந்துள்ளது. அப்பெண்களை மிகவும் மோசமாக படமெடுத்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளம் பெண்கள், இயக்குநர் வேல்சத்திரியனால் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது.
இருவர் கைது
இதனையடுத்து, இரும்பாலையை சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேல்சத்ரியன் மற்றும், ஜெயஜோதியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு பெண்களை போலி இயக்குநர் வேல்சத்திரியன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்நிலையில், வேல் சத்திரியன் மற்றும் ஜெயஜோதி ஆகியோர், இளம் பெண்களை ஏமாற்றி படம் எடுத்து மிரட்டி பொது ஒழுங்கிற்கு பங்கம் ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொண்டதால், இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆணையாளர் பரிந்துரையின்பேரில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா, போலி இயக்குநர் வேல் சத்திரியன் மற்றும் ஜெயஜோதியை குண்டர் தடுப்புக்காவலில் வைக்க ஆணை உத்தரவிட்டார். இதனையடுத்து, இவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.