பல்கலைகழகங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.. அமைச்சர் பொன்முடி பேட்டி..!
சேலம்: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு சார்பாக ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கான பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி வெளியாகியது. அதில் 12ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.32 சதவிகிதம் பேரும், மாணவர்கள் 90.96 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து மாணவர்களின் உயர்கல்வி செல்வதற்கு ஏதுவாக கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு இன்னமும் தேர்வு முடிவுகளே அறிவிக்கப்படவில்லை. இதனால் ஏராளமான கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது. ஆனால் சிபிஎஸ்சி மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. எப்போது வெளியாகும் என்றும் தெரியவில்லை. அதனால் அவர்களுக்காக கூடுதலாக 5 நாட்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான நாட்களை நீடித்துள்ளோம். குறிப்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் விதிமுறைகளை பின்பற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திலும் இடஒதுக்கீடு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு விதிகளை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பாக சுப. வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நேரடியாக சென்று சுப.வீரபாண்டியன் மேற்பார்வையிடுவார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, நீட் தேர்வு காரணமாக அனைத்து மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதை நீண்ட காலமாக நாங்ள் சொல்லி வருகிறோம். ஆனால் தனியார் நீட் பயிற்சி பள்ளிகள் பயன்பெறுவதற்காக தான், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஒருவர் நீட் பயிற்சி பள்ளி நடத்தி ஏராளமான பணம் சம்பாதித்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.