9 லட்சம் சதுர அடிக்கு ஹரியானாவிலிருந்து வந்த கார்பெட்! திகைக்க வைக்கும் திமுக இளைஞரணி மாநாடு செலவு!
சேலம்: திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்று முடிந்து 4 நாட்களாகியும் அந்த மாநாடு ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் திமுக நிர்வாகிகளை விட்டு அகலவில்லை.
4 நாட்களை கடந்தும் சேலத்தில் மாநாட்டுக்காக எப்படியெல்லாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதை பற்றித் தான் திமுக நிர்வாகிகள் மத்தியில் இன்னும் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. திமுக இளைஞரணி மாநாடு இந்தளவுக்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு அடித்தளமே பந்தல் சிவாவின் 3 மாத கால இடைவெளியில்லா உழைப்பும் ஒரு காரணம். அதாவது சினிமா ஷூட்டிங் செட் அப்களை மிஞ்சும் வகையில் 300 கலை இயக்குநர்களை கொண்டு 9 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைத்திருந்தார்.

இந்தியாவில் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் இவ்வளவு பெரிய பரப்பளவில் பந்தல் அமைத்ததில்லை. திறந்தவெளி மாநாடு, பொதுக்கூட்டம் என்று தான் நடத்துவார்கள். ஆனால் திமுக இளைஞரணி மாநாட்டு பந்தல் 9 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டிருந்ததால் உலக சாதனையில் இடம்பெற்றிருக்கிறது. 5 மாதங்களுக்கு முன்பே ஹரியானாவில் ஆர்டர் கொடுக்கப்பட்டு 9 லட்சம் சதுர பரப்பளபிற்கு கார்பெட் தயார் செய்யப்பட்டு அது இளைஞரணி மாநாட்டு பந்தலில் பயன்படுத்தப்பட்டது.

அதேபோல் மேடையை பொறுத்தவரை 100 அடி நீளம், 40 அடி அகலம், 7 அடி உயரம் என்கிற வகையில் அமைக்கப்பட்டிருந்தது. மேடையை ஒட்டியே முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு ரிலாக்ஸ் செய்ய ஒரு அறையும், மற்றொரு பக்கம் அமைச்சர்களுக்கான ஓய்வறையும் தயார் செய்யப்பட்டிருந்தது. மொத்தத்தில் இயக்குநர்கள் சங்கர், ராஜமவுலி ஆகியோர் தங்கள் திரைப்படங்களில் காட்டும் பிரம்மாண்டங்களை மிஞ்சும் வகையில் இந்த செட் அமைக்கப்பட்டிருந்தது. எல்லாம் சரி திமுக இளைஞரணி மாநாடுக்காக மலைக்க வைக்கும் தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தாம் முன்னின்று நடத்தும் மாநாடு என்பதால் உதயநிதி ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில், ஆலோசனைகளின் பேரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications