கூட்டமெல்லாம் குடும்பமாகாது.. அது கலைந்து விடும்.. விஜயை குறிவைத்து தாக்கிய கமல்ஹாசன்
சேலம்: முதல்வர் ஸ்டாலின் மேடையில் அமர்ந்து இருக்க''இங்கு பெருங்கூட்டம் வந்துள்ளது. எந்த அசம்பாவிதமும் இல்லை. ஒரு விபத்து இல்லை. கூட்டம் நடத்துவதற்கும் இது ஒரு முன்னுதாரணம். வழிதவறி போகவேண்டாம். கூட்டமெல்லாம் குடும்பமாகாது'' என்று நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி சேலத்தில் திமுகவின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினர்.

இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். அப்போது தொகுதி மறுவரை கொண்டு வரும் மத்திய அரசு மற்றும் விஜயை மறைமுகமாக கமல்ஹாசன் விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக கமல்ஹாசன் கூறியதாவது:
உயிரே, உறவே, தமிழே.. வணக்கம்.. நாளை நமக்கு எதிராக நடக்கப்போகும் அநீதிக்கு எதிரான குரலாகவும், எழுச்சி குரலாகவும் இது இருக்க வேண்டும். 33 விழுக்காடு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நாங்கள் என்றோ சொல்லி கொண்டு இருக்கிறோம். நாங்கள் எனும்போது ஒரு திராவிட கட்சி அல்ல அத்தனை கட்சிகளும் சொல்லி கொண்டு இருக்கும் விஷயத்தை இன்று தான் புதிய கண்டுபிடிப்பு போல் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் (மத்திய அரசு) இப்போது சொல்லும் 33 சதவீத இடஒதுக்கீடு என்பது தூண்டில் முள்ளின் நுனியில் வைத்திருக்கும் சின்ன மீன். அதை கவ்வமாட்டோம். விவாதிப்போம்.
இதையும், Delimitation என்று சொல்லும் சூழ்ச்சியையும் ஒன்றாக இணைக்க கூடாது என்பது தான் எங்களின் கருத்து. ஆனால் இரண்டையும் ஒன்றாக பேசுவோம் என்கிறீர்கள். தேர்தல் முடியட்டும் பேசலாம் என்றால் உடனே பேசலாம் என்கிறீர்கள். நான் அங்கு (நாடாளுமன்றம்) மக்கள் நீதி மய்யம் சார்பாக இங்குள்ள திராவிட தலைவர்கள் அனைவரும் என்னை ராஜ்யசபாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
இதனால் நான் அங்கு செல்ல அனுமதி உண்டா? இல்லா பிரசாரத்தை தொடர வேண்டுமா? என்று முதல்வரிடம் கேட்டேன். அப்போது பிரசாரத்தை விட தமிழகத்தின் எதிர்காலம் முக்கியம்.. கண்டிப்பாக போக வேண்டும் என்று கூறினார் உண்மை. அதை தான் நான் செய்யப்போகிறேன்
இங்கு பெருங்கூட்டம் வந்துள்ளது. எந்த அசம்பாவிதமும் இல்லை. ஒரு விபத்து இல்லை. கூட்டம் நடத்துவதற்கும் இது ஒரு முன்னுதாரணம். வழிதவறி போகவேண்டாம். கூட்டமெல்லாம் குடும்பமாகாது. அது கலைந்துவிடும். திராவிட குடும்பம் 75 ஆண்டு கட்டிக்காத்த குடும்பம்'' என்றார்.












Click it and Unblock the Notifications