சொத்து வரியா, சொத்தை பறிக்கும் வரியா! முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
சேலம்: ‛‛தமிழகத்தில் சொத்து வரி உயர்வு கண்டிக்கத்தக்கது. ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருந்தபோது சொத்து வரியா அல்லது மக்கள் சொத்தை பறிக்கும் வரியா என கேட்டார். இந்த கேள்வி இப்போது ஸ்டாலினுக்கு பொருத்தமாக இருக்கும்'' என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேலத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு கண்டிக்கத்தக்கது. ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருந்தபோது சொத்து வரியா அல்லது மக்கள் சொத்தை பறிக்கும் வரியா என கேட்டார். இந்த கேள்வி இப்போது ஸ்டாலினுக்கு பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் சொத்து வரியை கடுமையாக உயர்த்தி உள்ளார். 25 சதவீதம் உயர்த்தி இருந்தால் பரவாயில்லை. 2 ஆண்டு காலம் மக்கள் வேலையின்றி தவித்த நிலையில் இன்று 150 சதவீதம் உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

போதைப்பொருள் அதிகரிப்பு
கல்லூரி பகுதியில் போதைப்பொருள் அதிகமாக விற்பனை செய்வதாகவும், தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் டிஜிபி, போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார். கடந்த 10 மாதமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. போதைப்பொருள் சர்வசாதாரணமாக கிடைக்கிறது. இளைஞர்களும், மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலை உள்ளது. இவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. போலீஸ் துறையை வைத்துள்ள ஸ்டாலின் சரியாக நிர்வகிக்காதது தான் இதற்கு காரணம்.

திறமையில்லாத திமுக
தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடந்த 2 மாதமாக தொலைக்காட்சி, பத்திரிகைகளில் கூட்டு பலாத்காரம் செய்திதான் அதிகம் வருகிறது. இதில் சிறுமிகளும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்து. இந்த சம்பவங்கள் மிகவும் ஆபத்தானது. இதை தடுக்க வேண்டும். இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடப்பது என்பது திறமையில்லாத திமுக அரசின் செயல்பாட்டை காட்டுகிறது.

கேள்வி கேட்கும் மக்கள்
அதிமுகவில் நான் முதல்வராக இருந்தபோது பிரதமர், மத்திய அமைச்சர்களை டெல்லி சென்று பார்த்தேன். அப்போது அதிமுக, பாஜகவுக்கு அடிமையாக உள்ளது. டெல்லிக்கு காவடி தூக்கி செல்வதாக ஸ்டாலின் கூறினார். இப்போது எதை தூக்கி கொண்டு டெல்லி சென்றுள்ளார் என மக்கள் கேட்கிறார்கள். பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்துக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை பெற்று வருவதை நாங்கள் வரவேற்கிறோம்.

அரசியல் நாகரிகம் தெரியாத ஸ்டாலின்
இதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது ‛கோபேக்' மோடி என பலூன் பறக்கவிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்துக்கு வருவோரை வரவேற்பது தான் வழக்கம். ஆனால் திமுகவினர் ‛கோபேக்' மோடி என கூறினர். ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தி இந்திய மாணவர்களை மீட்ட பெருமை பிரதமர் மோடியையே சேரும். பிரதமரை கொச்சைப்படுத்தும் அளவுக்கு அரசியல் நாகரிகம் தெரியாதவர் தான் ஸ்டாலின். தற்போது மோடியை அவர் டெல்லி சென்று பார்த்துள்ளார்.

நில அபகரிக்கும் எண்ணத்தில் திமுக
நாங்கள் மத்திய அரசோடு இணக்கமான உறவு வைத்ததால் தான் தமிழ்நாட்டுக்கு அதிக நிதி, திட்டங்கள் கொண்டு வந்தோம். தேசிய நெடுஞ்சாலைகள் தரம் உயர்த்தி, துறைமுகம் விரிவுப்படுத்த வித்திட்டது அதிமுக அரசு தான்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு வந்துவிடும். அப்பாவி மக்களை குறிவைத்து நிலங்களை அபகரிப்பது என்பது திமுகவின் எண்ணம். இதை மறைக்க முடியாது. இதனால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது நில அபகரிப்புக்கு தனி பிரிவு துவங்கி தடுத்து நிறுத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications