வெள்ள அபாயத்தில் 12 மாவட்டங்கள்.. மீண்டும் கர்நாடகா அணைகளில் இருந்து 64 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 64,247 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டிவிட்டநிலையில் இனி வரும் தண்ணீர் முழுவதுதாக காவிரி டெல்டா பகுதியில் திறந்துவிடப்படும் என்பதால், வெள்ள அபாயம் ஏற்படும். எனவே காவரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்த காரணத்தால் கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக கர்நாடகா அணைகள் நிரம்பி வழிந்தன.
அணைகளின் பாதுகாப்பு கருதி சுமார் 3 லட்சம் கனஅடி நீர் வரை தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது இதன்காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது.

120 அடியை எட்டியது
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களில் மீண்டும் கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சுமார் 75 ஆயிரம் கனஅடிநீர் வரை மேட்டூர் அணைக்கு வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலவரப்படி அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 32 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி தண்ணீரும் என மொத்தம் 33 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்பட்டு உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 32 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகை, கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் கரை யோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐந்தருவியே தெரியவில்லை
இந்த சூழ்நிலையில் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் 39,247 கன அடி மற்றும், கபினி அணையில் 25,000 கன அடி நீர் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் மேலும் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 90 ஆயிரம் கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலுக்கு அருவிகளுக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஐந்தருவி தெரியாத அளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 31-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications