பாவமே.. சேலம் மோடி பிரசார மேடையில் இபிஎஸ் இருக்காரு..உளறி கொட்டிய நடிகை குஷ்பு!
சேலம்: பிரதமர் மோடி சேலத்தில் பங்கேற்ற பாஜக பிரசார மேடையில் ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிடும் போது இபிஎஸ் இங்கே இருக்காரு என நடிகை குஷ்பு உளறியது சமூக வலைதளங்களில் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.
லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். கோவையில் நேற்று சாலையில் ஊர்வலமாக சென்று பிரசாரம் செய்தார் மோடி. இன்று சேலத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் பிரசாரம் செய்தார் மோடி.

சேலத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான பாமக ராமதாஸ், தமாக ஜிகே வாசன், புதிய நீதி கட்சி ஏசி சண்முகம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அண்மையில் பாஜகவில் தமது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நடிகர் சரத்குமாரும் இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி திமுக- காங்கிரஸ் இணைந்த "இந்தியா" கூட்டணியை வாரிசு அரசியல், ஊழல் உள்ளிட்டவைகளை முன்வைத்து கடுமையாக விமர்சித்தார்.
சேலம் கூட்டத்தில் பேசிய பாஜக நடிகை குஷ்பு, இந்த முறை 400 தாண்டி என்.டி.ஏ. கவர்மென்ட் இருக்கப் போகுது.. ஆனால் பிரதமர் மோடி அவர்கள் சொல்லும் போது தமிழகத்தில் இருந்து எத்தனை சீட் ஜெயிச்சு அவர் கையில் கொடுக்கப் போகிறோம்? இது நம்ம கையில்தான் இருக்கிறது. இன்னைக்கு பாஜகவை பார்க்கும் போது அத்தனை பெரிய தலைவர்கள் மேடையில் இருக்கின்றனர். இபிஎஸ் அவர்கள் இருக்கிறார்கள்.. சரத்குமார் அவர்கள் இருக்கிறார்.. ஏசிஎஸ் அவர்கள் வரப் போகிறார்.. டிடிவி அவர்கள் இருக்கிறார்.. மற்ற கட்சியில் இருந்து எல்லோரும் வந்துகிட்டு இருக்காங்க..வேற கட்சியில் இருந்து பாஜகவில் இணையறாங்கன்னு அதுக்கு காரணம் வந்து இந்த நாட்டுக்கு நல்லது யாரால் செய்ய முடியும்னா அது மோதி அவர்களால் மட்டும்தான் என்பதால் இணைகிறார்கள் என்றார்.
அதாவது ஓ.பன்னீர்செல்வத்தை ஓபிஎஸ் என குறிப்பிடுவதற்கு பதிலாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிடும் இபிஎஸ் என நடிகை குஷ்பு, மோடியின் பிரசார மேடையில் தவறுதலாக பேசினார். இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications