"ஒரே ஆண்டில் 25 லட்சம் வீரர்கள்.. ஒரு கோடி பேரை உருவாக்குவதே இலக்கு" அமைச்சர் மெய்யநாதனின் திட்டம்!
சேலம்: இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்கு என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக சர்சதேச அளவிலான விளையாட்டுக்களை இளைஞர்களை மத்தியிலும் பரவலாக கொண்டு செல்ல தமிழக அரசு முயற்சித்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடத்தினாலும், தமிழக அரசுப் பள்ளிகளிலும் செஸ் போட்டியை நடத்தியதன் மூலம் மாணவர்கள் மத்தியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பான வரவேற்பு இருந்தது.
இதனைத் தொடர்ந்து சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரத்தை திருச்சி அருகே அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் விளையாட்டு பற்றி விழிப்புணர்வும், விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லப்படும்.
மோடி, ஷா எனக்கே “ஸ்கெட்ச்” போடுறாங்களா? ஹரேன் பாண்டியா கொலையின் மர்மம்.. சுப்ரமணியன் சாமி பரபர பதிவு
தமிழ்நாடு கிரிக்கெட் லீக்
இதன் ஒரு பகுதியாக சேலம் எம்பி எஸ்ஆர் பார்த்திபன் சார்பில் புதிதாக தமிழ்நாடு கிரிக்கெட் லீக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன.
மெய்யநாதன் பேச்சு
இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 160 வீரர்களை தேர்வு செய்யப்பட்டு 8 அணிகளாக பிரித்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது. விளையாட்டு போட்டியினை தொடங்கி வைக்க விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், கிராமப்புறத்தில் உள்ள திறமையான வீரர்களுக்கு இந்த போட்டி மிகவும் பயனுள்ளதாக அமையும்.
விளையாட்டுக்கு முக்கியத்துவம்
கொரோனா தொற்றுக்குப் பிறகு விளையாட்டுத் துறை மீதான பார்வை மக்களிடையே அதிகரித்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு துறைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தான் செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலக நாடுகளே வியக்கும் வகையில் நடத்தி காட்டி உள்ளார்.
16 மாதங்களில் ரூ.36 கோடி
அதேபோன்று பல்வேறு சர்வதேச போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர் ஆட்சி பொறுப்பேற்ற 16 மாதங்களில் தமிழகத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு என ரூ.36 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தமிழக முதலமைச்சரின் பல்வேறு நடவடிக்கையால் தமிழக வீரர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பரிசுகளை பெற்று வருகின்றனர்.
ஒரு கோடி வீரர்கள்
தமிழகத்தில் இந்த ஆண்டு 25 லட்சம் விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளோம். அடுத்த ஆண்டு மேலும் 25 லட்சம் வீரர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் விரைவில் ஒரு கோடி விளையாட்டு வீரர்களை உருவாக்குவதாக எங்களின் இலக்கு. சர்வதேச போட்டிகளிலும் தேசிய அளவிலான போட்டிகளிலும் தமிழக வீரர்கள் பதக்கம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் விளையாட்டில் இந்தியாவின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவது தமிழக அரசின் குறிக்கோள் என்று தெரிவித்தார்.