கர்நாடகாவில் இருந்து 72ஆயிரம் கன அடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம்91 அடி
கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 72 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 91 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் : கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 72 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 91 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களாக கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியிருப்பதால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. கபினியில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 37ஆயிரம் கனஅடியும் நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த தண்ணீர் இருமாநில எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வருகிறது. இங்கு நேற்று காலை 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இது இன்று காலை 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 89.77 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 91.45 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு இதே அளவு நீடித்தால் விரைவில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications