71வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை! விவசாயிகள் மகிழ்ச்சி! காவிரி அன்னைக்கு வழிபாடு!
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு அதிகபட்சமான நீர் வரத்து உள்ளதால் இன்றைய தினம் அதன் நீர் மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேலும் நீர் வரத்து அதிகரித்தே வருவதால் இன்னும் வரும் நாட்களில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என தெரிகிறது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில்தான் காவிரி உருவாகிறது. அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களை கடந்த தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கும் மதகின் அருகே காவிரி அன்னையை வரவேற்று மலர் தூவி அதிகாரிகளும் பொதுமக்களும் பூஜைகளை செய்தனர். 100 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அங்கிருந்து ஒகேனக்கல், தருமபுரி, சேலம் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. இந்த காவிரி நீர் டெல்டா விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்த அணையில் தண்ணீர் இருந்தால்தான் விவசாயம் செழிக்கும். இல்லாவிட்டால் மழை பெய்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
மேட்டூர் அணை திறக்கப்பட்டால் அந்த நீரால் 12 மாவட்டத்தினர் பயன்பெறுவார்கள். இந்த நிலையில்தான் கடந்த ஓராண்டாகவே மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் மேட்டூர் அணை வறண்டு அங்கிருந்த நந்தி சிலையே வெளியே தெரிந்தது. ஆனால் தற்போது தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
இதனால் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பியுள்ளன. மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் இருந்து உபரி நீர் வந்து கொண்டே இருப்பதால் முதலில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது விவசாய தேவைக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அந்தளவுக்கு கர்நாடகாவில் மழை கொட்டி வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆரம்பத்தில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. பிறகு 1.30 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
கேஆர்எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடியும் கபினியில் இருந்து 30 ஆயிரம் கனஅடியும் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் இன்று காலை ஒகேனக்கல் பகுதியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தற்போது வினாடிக்கு 84 ஆயிரம் கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 94 அடியாக உள்ளது. இதே போல் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருந்தால் நாளை அல்லது நாளை மறுநாள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. மேட்டூர் வரலாற்றில் 71ஆவது முறையாக 100 அடியை மேட்டூர் அணை எட்டியது. இதையடுத்து உபரி நீர் திறக்கும் மதகின் அருகே மலர்களை தூவி காவிரி அன்னையை வரவேற்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் பூஜை செய்தனர். கடந்த 4ஆம் தேதி 39.67 அடியாக இருந்த மேட்டூர் அணையில் 23 நாட்களில் 60 அடி உயர்ந்துவிட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் இரு முறை 50-க்கும் குறைவான அடி நீர் மட்டம் இருந்ததால் விவசாயிகள் வேதனையில் இருந்தனர்.
ஜூன் 12 ஆம் தேதி அன்று குறுவை சாகுபடி நீர் திறக்கும் போது வெறும் 43 அடியாக இருந்ததால் அன்றைய தினம் நீரை திறக்கவில்லை. அதன் பிறகு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை கடல் போல் காட்சியளிக்கிறது. விரைவில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும்.












Click it and Unblock the Notifications