மேட்டூர் அணை நீர் மட்டம் 71 அடியாக சரிவு.. வெளியே தெரியும் நந்தி.. தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா
சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 71 அடியாக சரிந்ததை அடுத்து, இதுநாள் வரை தண்ணீருக்குள் மூழ்கிக் கிடந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தி சிலை வெளியே தெரிய தொடங்கியுள்ளது. கர்நாடகா மாநில அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை விட மறுப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது. கேரளா, கர்நாடகாவில் மழை பெய்தாலும் தமிழ்நாட்டில் மழை பொய்த்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டபோது நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு வினாடிக்கு 176 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தற்போது டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்தைக் காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 71 அடியாக சரிந்துள்ளது.
நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தி சிலை, நீருக்கு வெளியே தெரிய தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டபோது, தண்ணீர் தேங்கும் பகுதியாக 60 சதுர மைல் பரப்பளவு கணக்கிடப்பட்டது. இந்த பரப்பளவில் அமைந்திருந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது முக்கிய வழிபாட்டுத் தலமாக இருந்த கடவுள் சிலைகளை எடுத்துக்கொண்டு, கோயில்களை அப்படியே விட்டுவிட்டனர்.
கிராம மக்கள் விட்டுச்சென்ற கோயில்களில் மேட்டூர் பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். மேலும், 100 அடி உயரம் கொண்ட கிறிஸ்தவ தேவாலயம், கோட்டைர் பகுதியில் உள்ள தொன்மைவாய்ந்த கோட்டை, கீரைக்காரனூர் பகுதியில் உள்ள சோழப்பாடி வீரபத்ரன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் ஆகியவற்றையும் விட்டுவிட்டுச் சென்றனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்குக் கீழே குறையும்போது, அதுவரை நீருக்குள் மூழ்கி இருந்த கோயில்கள் தென்படத்தொடங்குகின்றன. முதலில் கிறிஸ்தவ தேவாலய கோபுரம் தெரியத் தொடங்கியது. தற்போது நீர்மட்டம் 71 அடியாக சரிந்த நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தி சிலையும் ஒரு அடி உயரத்திற்கு தெரியத் தொடங்கியுள்ளது. தண்ணீர் வற்றிப்போனதால் பண்ணவாடி பரிசல் துறையை ஒட்டி உள்ள நிலப்பரப்புகளில் கால்நடை தீவனங்கள் மற்றும் புற்கள் அதிகளவில் முளைத்து பார்ப்பதற்கு பசுமையான மேய்ச்சல் நிலமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர்.
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டாலும் அணையில் தண்ணீர் வரத்து குறைந்து வருவதால் சில வாரங்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா அணைகளில் நீர் இருப்பு இருந்தாலும் தமிழகத்தின் பங்கு தண்ணீரை திறக்க அம்மாநில அரசு மறுக்கிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர். இதனிடையே நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்துடன் அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிடுமாறு கர்நாடக மாநில அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications